விரல்கள் ஒட்டியிருந்தற்காக ஆதார் அட்டையை மறுக்கலாமா?
ஹைதராபாத்: கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆதார் அட்டை திட்டம் இப்போது ஒரு அப்பாவி சிறுவனின் உயிரைப் பறித்துள்ளது. இதற்குக் காரணம், அந்த சிறுவனின் விரல்கள் ஒட்டியிருந்ததால், விரல் ரேகை எடுக்க முடியாததால், ஆதார் அட்டை இல்லை என்று அதிகாரிகள் கூறி விட்டதால், அந்த சிறுவன் தற்கொலை செய்துள்ளான்.
விசாகப்பட்டிணம் மாவட்டம் தும்ரிகூடா மண்டலத்தில் உள்ள கில்லோகூடா கிராமத்தில் உள்ள அரசு விடுதியில் தங்கி ஆறாம் வகுப்பு படித்து வந்த பாலகிருஷ்ணா என்ற 11 வயது மாணவன்தான் இப்படி உயிரை மாய்த்துள்ளான். ஆதார் அட்டை விதிமுறையால் அவன் இறந்துள்ளான்.
இவனது பள்ளி தலைமையாசிரியர் அரசு சலுகைகளைப் பெற ஆதார் அட்டை அவசியம், எனவே உடனே அதைப் பெற ஏற்பாடு செய் எனத் தெரிவிததைத் தொடர்ந்து, அட்டையைப் பெற முயற்சித்துள்ளான் பாலகிருஷ்ணா. இவனுக்கு கையில் ஒரு பிரச்சினை உள்ளது. அதாவது, கைவிரல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருந்துள்ளது.
இதனால் அரசின் சலுகைகளைப் பெற ஆதார் அட்டை உதவும் என்று அவனுக்குக் கூறப்பட்டதால் அட்டையைப் பெற ஆர்வமாக இருந்துள்ளான். ஆனால் விரல்கள் ஒட்டியிருப்பதால் கைரேகை எடுக்க முடியாமல் போயுள்ளது. இதனால் அவனுக்கு அட்டை கிடையாது என்று அதிகாரிகள் கூறி விட்டார்களாம்.
இதனால் மனமுடைந்த பாலகிருஷ்ணா தற்கொலைக்குப் போய் விட்டான். இதுபோன்ற பிரச்சினைகளுடன் நபர்களுக்கு விதிமுறைகளில் தளர்வு செய்து அட்டையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications