மகாராஷ்டிரா பாஜக முதல்வராக பட்நவிஸ் தேர்வு- ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜக தலைவர் தேவேந்திர பட்நவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.
288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாரதிய ஜனதா 123 இடங்களைக் கைப்பற்றியது. சிவசேனா 63 இடங்களில் வென்றது.
இதனால் பாஜக தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் சிவசேனா, பாஜக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முன்வந்தது. இதனைத் தொடர்ந்து இன்று பாரதிய ஜனதாவின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே, சட்டசபை கட்சித் தலைவராக பட்நவிஸ் பெயரை முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பட்நவிஸ் ஒருமனதாகத் தேர்வானார்.
44 வயதாகும் பட்நவிஸ், மாநில பாஜக தலைவராக இருக்கிறார். அவர் விதர்பா பகுதியைச் சேர்ந்தவர். தாம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநில ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் பட்நவிஸ்.
பட்நவிஸுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.