கெஜ்ரிவால் கைது பப்ளிசிட்டி ஸ்டண்டா?
டெல்லி: பாஜக தலைவர் நிதின் கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டும் என்றே கைதாகி சிறைக்கு சென்றுள்ளாரோ என்று கூறப்படுகிறது.
டெல்லி சட்டசபையை கலைக்க வேண்டாம் என்று ஆளுநர் நஜீப் யங்கை சந்தித்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டார். இதையடுத்து டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததற்காக மக்களிடம் இன்று மன்னிப்பு கேட்டார். மேலும் மறுதேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் நிதின் கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜாமீன் பெற ரூ.10 ஆயிரம் பிணைத்தொகையை செலுத்த மறுத்ததால் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் 2 நாட்கள் சிறையில் இருக்க வேண்டும்.
அவர் ஏன் பிணைத்தொகையை செலுத்தவில்லை என்ற கேள்வி எழுகிறது. அவரிடம் பணம் இல்லையா?. கோடீஸ்வரரான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் பணம் இல்லாமல் இல்லை.
அப்படி இருந்தும் அவர் பணத்தை செலுத்தாமல் கைதாகி இருப்பது வேண்டும் என்றே அவர் செய்தது என்று தான் கூறப்படுகிறது. தற்போது மீடியாக்கள் மோடி குறித்த செய்திகளை விட்டுவிட்டு கெஜ்ரிவால் கைதானது குறித்து தான் செய்தி வெளியிடுகின்றன.
கெஜ்ரிவால் டெல்லி மக்களின் நம்பிக்கையை பெறவும், மக்களின் கவனத்தை ஈர்க்கவும் இப்படி செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.