திரிபுராவில் தின் ராத் டிவி செய்தியாளர் வெட்டிக்கொலை - இண்டர்நெட் சேவை துண்டிப்பு
திரிபுரா மாநிலத்தில் பழங்குடியினரிடையே ஏற்பட்ட மோதலில் பத்திரிகையாளர் சாந்தனு பவுணிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகர்தலா: திரிபுராவில் பழங்குடியினர் கலவரம் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
திரிபுரா மாநிலத்தின், கோவாய் பகுதியில் பழங்குடி இன அமைப்புகளுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இந்த மோதல், இன்று கலவரமாக வெடித்தது.
இதுகுறித்த செய்தி சேகரிக்க தின் ராத் தொலைக்காட்சியைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளர் சாந்தனு கலவரம் நடந்த பகுதிக்கு சென்றார்.
டிவி செய்தியாளர் கொலை
மோதல் நடந்த பகுதியில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த டிவி செய்தியாளர் சாந்தனு மர்ம கும்பலால் வெட்டி படு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பத்திரிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவுரி லங்கேஷ் சுட்டுக்கொலை
சமீப காலமாக பத்திரிக்கையாளர்கள் மீது நடைபெறும் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன், பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொடூரமான கொலை செய்யப்பட்டது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செய்தியாளர்கள் படுகொலை
கடந்த 1992லிருந்து இன்று வரையிலும் 27 பத்திரிக்கையாளர்கள் எந்த குற்றமும் இல்லாமல் தங்கள் வேலையை நியாயமாக செய்ததற்காக கொல்லப்பட்டிருப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கைகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன.
144 தடை உத்தரவு
இந்த நிலையில் திரிபுரா மாநிலத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பத்திரிகையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலவரம் மேலும், பரவாமல் தடுப்பதற்காக மேற்கு திரிபுரா மற்றும் கோவாய் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
|
இணையதள சேவை துண்டிப்பு
இந்நிலையில், திரிபுராவின் அகர்தலாவில் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.