புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நாளை பதவியேற்பு
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நாளை பதவியேற்கிறார்.
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஜே.எஸ்.கேஹரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்ததால், புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நாளை பதவியேற்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருக்கும் ஜே. எஸ்.கேஹரின் பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடுத்த தலைமை நீதிபதியைத் தேர்வு செய்யும் பணியில் மத்திய சட்ட அமைச்சகம் இறங்கியது.
அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதியாக இருப்பவர் தான் பரிந்துரைக்க வேண்டும் என்பது விதி. அதன் அடிப்படையில்தான் தற்போதைய தலைமை நீதிபதியாக இருக்கும் ஜே.எஸ்.கேஹரிடம் சட்ட அமைச்சகம் கருத்து கேட்டது.
அப்போது, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு, தற்போது நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ராவின் பெயரை ஜே.எஸ்.கேஹர் பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து, அடுத்த தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ராவை நியமித்து மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் கேஹரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்துவிட்டதால், புதிய தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்ட தீபக் மிஸ்ரா நாளை பதவியேற்றுக் கொள்கிறார். பாட்னா, டெல்லி உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய தீபக் மிஸ்ரா, நிர்பயா, ஜல்லிக்கட்டு, யாகூப் மேமன் வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.