ஒரு வாரத்திற்குள் டெல்லி சட்டசபையைக் கலைக்க வேண்டும்... ஆம் ஆத்மி கெடு
டெல்லி: ஜனாதிபதி ஆட்சி நடைபெறும் டெல்லியில் சட்டசபையை கலைக்க ஒரு வாரம் ‘கெடு' விதித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. மேலும், உடனடியாக மறுதேர்தல் நடத்துமாறும் அக்கட்சித் தேர்தல் வலியுறுத்தியுள்ளது.
கடந்தாண்டு இறுதியில் டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது.
ஆம் ஆத்மி அரசை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த நிலையில், பதவியேற்ற 49 நாட்களில் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால். அதனைத் தொடர்ந்து வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராததால், அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது. அதன் தொடர்ச்சியாக, பிறக் கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் வசம் இழுத்து புதிய ஆட்சி அமைக்க பாஜக முயல்வதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது.
தங்கள் கட்சி அவசரப்பட்டு ஆட்சியைக் கலைத்தது முட்டாள்தனமானது என வருத்தப்படத் தொடங்கிய ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது டெல்லி சட்டசபையை கலைத்து விட்டு, புதிதாக தேர்தல் நடத்தக்கோரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக டெல்லி ஜந்தர்மந்தரில் நேற்று ஆம் ஆத்மி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆம் ஆத்மி தலைவர்கள் மனீஷ் சிசோடியா, யோகேந்திர யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-
தோல்வி பயம்...
பா.ஜனதாவும், காங்கிரசும் புதிதாக டெல்லி சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராக இல்லை. தோல்வி பயத்தில் தேர்தலை சந்திக்காமல் ஓடுகின்றன. அதனால்தான், மத்திய அரசும், டெல்லி சட்டசபையை கலைக்க அனுமதிக்கவில்லை.
தொகுதி எண்ணிக்கை கூடும்...
ஆம் ஆத்மி மட்டுமே தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறது. இப்போது தேர்தல் நடந்தால், 40 இடங்களில் வெற்றி பெறுவோம். அக்டோபர் மாதம் தேர்தல் நடந்தால், 50 தொகுதிகளிலும், பிப்ரவரி மாதம் தேர்தல் நடந்தால், 55 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அதன்பிறகு தேர்தல் நடந்தால், பா.ஜனதாவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.
கையெழுத்துப் போராட்டம்...
இந்த சூழ்நிலையில், டெல்லி சட்டசபையை கலைக்க ஒரு வாரம் அவகாசம் அளிக்கிறோம். ஒரு வாரத்துக்கு பிறகும் சட்டசபையை கலைக்காவிட்டால், வீடு, வீடாக சென்று, சட்டசபையை கலைத்து விட்டு தேர்தல் நடத்தக்கோரி, கையெழுத்து பெறுவோம்.
பாஜகவின் கைப்பொம்மை...
டெல்லி கவர்னர் நஜிப் ஜங், தனது பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக, மத்திய அரசின் சொல்படி ஆடுகிறார். அவர் சுதந்திரமாக முடிவுகளை எடுக்கவில்லை' என இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.