வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா: ராஜ்யசபாவில் திமுக, அதிமுக கடும் எதிர்ப்பு
டெல்லி: மத்திய அரசின் வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதாவை ராஜ்யசபாவில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுமே கடுமையாக எதிர்த்தன.
மத்திய அரசு வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதாவை கொண்டு வருவதாக அறிவித்தது. ஆனால் இதன் முக்கிய அம்சங்கள் பெரும்பான்மையினருக்கு எதிராக இருக்கிறது என்றும் மாநிலங்களின் உரிமையை பறிக்கிறது என்றும் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இறுதிக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று பிற்பகல் ராஜ்யசபாவில் இம்மசோதா மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் மீது பேசிய பாஜக தலைவர் அருண் ஜேட்லி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
பின்னர் அதிமுக எம்.பி. மைத்ரேயனும் மாநில உரிமைகளைப் பறிக்கும் இம்மசோதாவை கடுமையாக எதிர்ப்பதாக கூறினார். இதேபோல் திமுகவின் செல்வகணபதியும் மத்திய அரசின் இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
அதன் பின்னர் மசோதா மீது பேசிய மத்திய அமைச்சர் கபில்சிபல், கூட்டாட்சி உரிமைக்கு எதிரானது அல்ல இம்மசோதா. கூட்டாட்சி உரிமையை பாதுகாக்கக் கூடியதுதான் இம்மசோதா என்றார்.
இதன் பின்னர் இம்மசோதா மீதான விவாதத்தை சபையின் துணைத் தலைவர் குரியன் ஒத்தி வைத்தார்.
ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம்
பின்னர் பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர் கொள்முதல் ஊழல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசினார். அப்போது எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.