அண்ணாவும், எம்.ஜி.ஆரும் எவ்வளவு பெரிய தலைவர்கள்: ஜெ., வழக்கு விசாரணையின்போது நீதிபதி புகழாரம்!
பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு விசாரணையின் போது நீதிபதி குமாரசாமி, தமிழகத்தில் அண்ணாதுரையும், எம்.ஜி.ஆரும் மிகப் பெரிய தலைவர்களாக திகழ்ந்ததாக பாராட்டிப் பேசினார்.
நீதிபதியின் பாராட்டால் இறுக்கமாக போய்க் கொண்டிருந்த வழக்கு விசாரணையில் சுவாரஸ்யம் கூடியது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான, சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு விசாரணை கர்நாடக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையின் 11வது நாளான ஜெயலலிதா தரப்பு வக்கீல் நாகேஸ்வரவராவ், ‘ஜெயலலிதா வீட்டில் இல்லாதபோது, முறையான அனுமதி பெறாமல் ரெய்டு நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், அப்போது பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளியின் எடை, 1,116 கிலோ அல்ல என்றும், 1,250 கிலோ என்றும் அதன் மதிப்பு ரூ. 83 லட்சத்து 7,000 ரூபாய் என்றும் தெரிவித்தார்.
அப்போது, நீதிபதி குமாரசாமி அரசு வக்கீல் பவானி சிங்கை பார்த்து, "ரெய்டு நடத்துவதற்கு, அனுமதி பெறவில்லையா. ஜெயலலிதா இல்லாத போது, யார் முன்னிலையில் ரெய்டு நடந்தது?" என்றார்.
அதற்கு வக்கீல் பவானிசிங் அளித்த பதிலில், ‘ஜெயலலிதாவின் அனுமதி பெற்ற, அவரது செயலாளர் பாஸ்கரன் முன்னிலையில் ரெய்டு நடந்தது. கைப்பற்றப்பட்ட, வெள்ளி பொருட்கள் பட்டியல் குறித்து, அவரிடமே கையெழுத்து பெறப்பட்டது. அவர் இறந்து விட்டார். மரண சான்றிதழ், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நாகேஸ்வரராவ் தனது வாதத்தில், ‘ஜெயலலிதா வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட வெள்ளிப் பொருட்களில் எம்.ஜி.ஆர்., வழங்கிய வெள்ளி செங்கோலும் கிரீடமும் உள்ளது. தமிழக தலைவர்கள் பிறந்த நாள் கொண்டாடும்போது அந்தந்த கட்சியினர் பரிசு வழங்குவதுண்டு. இதுபோன்று, ஜெயலலிதாவின் 1992ல் 44வது பிறந்த நாளன்று ஒன்றரை கோடி ரூபாய் 'டிடி' வந்தது. இது பற்றி 125 பேர் சாட்சியம் கூறியுள்ளனர். இவர்களிடம், வழக்கை விசாரித்த எஸ்.பி., நல்லம்ம நாயுடு எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை.
ஆந்திரா மாநிலம் பகிராபாத்தில் ஜெயலலிதாவுக்கு 15 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் ஜெயலலிதா தாயார் சந்தியா காலத்தில் 1964ல் வாங்கப்பட்டது. இந்த நிலத்திலிருந்து 1972 வரை ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வந்தது. 1987 முதல் 1993 வரை ஆண்டுக்கு ஏழு முதல் எட்டு லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. இதற்கு வருமான வரியும் செலுத்தியுள்ளனர்.
ஆனால், ஊழல் தடுப்பு போலீஸார் ஐந்து ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் மட்டுமே வருமானம் வந்ததாக குறிப்பிட்டுள்ளனர். இதை முந்தைய சிறப்பு நீதிமன்றம் ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வருமானம் எனக்கூறி ஐந்து ஆண்டுகளுக்கு 10 லட்சம் ரூபாய் என்று கணக்கிட்டனர்' என்றார்.
அண்ணாதுரை, எம்.ஜி.ஆருக்கு-நீதிபதி குமாரசாமி புகழாரம்:
நீதிபதி குமாரசாமி : தி.மு.க., நிறுவனர் அண்ணாதுரை, பெரிய தலைவர். தமிழகத்தை ஆண்ட காங்கிரஸிடமிருந்து ஆட்சியை பிடித்து முதல்வரானார். தமிழகத்தில் திராவிட பாரம்பரிய கட்சி, மாநிலத்தில் பெரிய கட்சியாக விளங்கியது. இதன் பின்னர், எம்.ஜி.ஆர்., மக்கள் ஆதரவு பெற்று பெரிய தலைவராக விளங்கினார். அவர் எவ்வளவு நாள் முதல்வராக இருந்தார்.
ஜெ., வக்கீல் செந்தில்: 10 ஆண்டுகள், முதல்வராக இருந்தார்.
நீதிபதி: அதன் பின்னர், ஜெயலலிதா முதல்வரானாரா?
ஜெ., வக்கீல் அசோகன்: இல்லை, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.
நீதிபதி: அது எப்படி நடந்தது? எம்.ஜி.ஆர்., மறைந்த அனுதாப அலையில் அ.தி.மு.க., வெற்றி பெற்றிருக்கலாமே.
வக்கீல் அசோகன்: அந்த தேர்தலில் மறைந்த எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகி ஒரு அணியாகவும், ஜெயலலிதா மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். அ.தி.மு.க., இரண்டாக உடைந்ததால், வெற்றி பெற முடியவில்லை.
என இவ்வாறு அவர் தெரிவித்தார்.