மே.16க்கு முன்னர் புதிய ராணுவ தளபதியை நியமிக்க கூடாது: பாஜக
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவு வெளியாகும் மே 16 ஆம் தேதிக்கு முன்னர் புதிய ராணுவ தளபதி நியமனம் தொடர்பான முடிவை எடுக்கக் கூடாது என மத்திய காங்கிரஸ் தலைமையிலான அரசை பாரதிய ஜனதா கட்சி எச்சரித்துள்ளது.
தற்போதைய ராணுவ தலைமை தளபதியான விக்ரம் சிங், வருகிற ஜூலை 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து புதிய ராணுவ தளபதியை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தொடங்கி உள்ளதாகவும், ராணுவ துணை தளபதியான தல்பீர் சிங்கை அப்பதவிக்கு நியமிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சகம் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பதவி விலகும் அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்றும், தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள மே 16 ஆம் தேதிக்கு முன்னதாக இது தொடர்பாக எத்தகைய நடவடிக்கைகளையும் மத்திய காங்கிரஸ் அரசு மேற்கொள்ளக் கூடாது என்று பா.ஜனதா எச்சரித்துள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத், ராணுவ தளபதி நியமனம் விஷயத்தில் அவசரம் கூடாது என்றார்.
கடற்படை தளபதி நியமனத்தில் சர்ச்சை
ஏற்கெனவே நாட்டின் புதிய கடற்படை தளபதியாக ராபின் தோவான் நியமிக்கப்பட்டதில் சர்ச்சை எழுந்திருக்கிறது. கடற்படையின் மூத்த அதிகாரி சேகர் சின்ஹா தம்மை நியமிக்காமல் ராபின் தோவானை ஏன் நியமிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் .இதற்கு முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் ராணுவ தளபதி நியமனமும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.