10 ஆண்டுகளில் 15வது முறை.. குஜராத்தில் கசிந்த வினாத்தாள்.. கடைசி நேரத்தில் போட்டித் தேர்வு ரத்து!
இளநிலை எழுத்தர் பணிக்காக போட்டித் தேர்வு வினாத்தாள் கசிந்ததால், குஜராத் அரசு தேர்வை ரத்து செய்துள்ளது
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் இளநிலை எழுத்தர் பணிக்காக போட்டித் தேர்வு வினாத்தாள் கசிந்ததால், கடைசி நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், குஜராத் மாநிலத்தில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 15வது முறையாக அரசு நடத்தும் போட்டித் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் இளநிலை எழுத்தர் ஆட்சேர்ப்புக்கான போட்டித் தேர்வு இன்று நடைபெறவிருந்தது. மொத்தம் உள்ள 1,181 பணியிடங்களுக்காக 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 2,995 தேர்வு மையங்களில் நடக்க இருந்தன.
இன்று காலை 11 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடக்கவிருந்த நிலையில், ஏராளமானோர் தேர்வு மையங்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். சில இளைஞர்களுக்கு வெவ்வேறு மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இதனால் பலரும் நேற்று முதலே பயணிக்க தொடங்கி இருந்தனர்.
“தீ”யாக நடக்கும் திரிபுரா தேர்தல் பணி.. 48 வேட்பாளர்களை அறிவித்த பாஜக! ஆட்சியை தக்க வைக்குமா தாமரை?
போட்டித் தேர்வு ரத்து
இதனிடையே இன்று அதிகாலை இளநிலை எழுத்தர் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்துவிட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை கைது செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், போட்டித் தேர்வுக்கான வினாத்தாள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அளித்த தகவலின் பேரில், இளநிலை எழுத்தர் பணிக்காக போட்டித் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கம்
இதுகுறித்து குஜராத் பஞ்சாயத்து தேர்வு வாரியம் தரப்பில் கூறுகையில், இளநிலை எழுத்தர் போட்டித் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் ஒருவரை விசாரித்து வருகின்றனர். இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், தேர்வர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். தேர்வர்கள் யாரும் தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டாம். இந்த தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15வது முறை
அதேபோல் தேர்வர்கள் பேருந்துகளில் பயணிக்கும் போது தேர்வுக்கான அடையாள சீட்டை காண்பித்தால், கட்டணம் பெறப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 15 முறை வினாத்தாள் கசிந்துள்ளது. அரசு தரப்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கான வினாத்தாள் தொடர்ந்து கசிவது இளைஞர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்களின் எதிர்காலம்
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநில தலைவர் இசுதன் காத்வி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், இளநிலை எழுத்தர் பணிக்கான போட்டித் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பாஜக அரசு பொறுப்பேற்க வேண்டும். பாஜக அரசு இளைஞர்களின் எதிர்காலத்துடன் தொடர்ந்து விளையாடி வருகிறது. வினாத்தாள் கசியவிடாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.