சிக்கிம் - நேபாளம் எல்லையில் 5.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் - குலுங்கிய வீடுகளால் மக்கள் பீதி
சிக்கிம் - நேபாளம் எல்லை அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
காத்மண்டு: சிக்கிம்-நேபாள எல்லைக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. திடீர் நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால் மக்கள் பீதியுடன் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
சிக்கிம் மாநிலத் தலைநகர் கேங்க்டாக்கின் தென்கிழக்கு பகுதியில் 25 கி.மீ தொலைவில் இரவு 8.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிக்கிம்-நேபாளம் எல்லை அருகே 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த தகவலை நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதி படுத்தியுள்ளது.

வடக்கு வங்கம், அசாம் மற்றும் பீகாரின் வேறு சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளம் மற்றும் பூட்டானின் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பீதியடைந்த பொது மக்கள் வீட்டை விட்டி வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளிடம் கேட்டு வருகிறார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பீகார், அசாம் மற்றும் சிக்கிம் மாநில முதல்-மந்திரிகளிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications