அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்கு புதிய கிடுக்குப்பிடி போடுகிறது தேர்தல் ஆணையம்
அரசியல் கட்சிகள் நன்கொடைகளை பெறுவதற்கு புதிய கிடுபிடிகளை தேர்தல் ஆணையம் பரிந்துரைந்துள்ளது.
டெல்லி: தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வேட்பாளர்கள் பலரும் வாக்குகளை பணம் கொடுத்து விலைக்கு வாங்குகின்றனர். ஒரு ஓட்டுக்கு ரூ. 2000 முதல் 5000 வரை கூட தருகின்றனர். இவை அனைத்தும் பதுக்கி வைக்கப்பட்ட கறுப்பு பணம்தான்.
கருப்பு பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து, மின்னணு முறையிலான பண பரிவர்த்தனையை முன்னெடுக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில், வருமான வரிச் சட்டம் 13 ஏ-ன் படி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே வரி விலக்கு பெற முடியும்.அதே போல, குறிப்பிட்ட காலவரையறைக்குள் நன்கொடைகள் பற்றி அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும். 20 ஆயிரத்துக்கும் மேல் நன்கொடை பெறும் அரசியல்
கட்சிகள் அதற்கு உரிய ஆவணங்களை பராமரிக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல்களில் கருப்பு பணம் விளையாடுவதை தடுக்கும் விதமாக தேர்தல் ஆணையம் முக்கியமான சிபாரிசை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது. அரசியல் கட்சிகள் பெயர் கூறாதவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்துக்கு மேல் நிதியாக நன்கொடை பெறுவதற்கு தடை விதித்து சட்ட திருத்தம் செய்ய வேண்டும்
என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.
சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெறுகிற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் அதியா சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய போது,தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பெறும் வருமானத்துக்கு வருமான வரிச்சட்டம் 13 ஏ பிரிவின் கீழ் வரிவிலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த கட்சிகள் தங்கள் வங்கி கணக்குகளில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து இருந்தால் அந்த தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வருமான வரி சட்டம் பிரிவு 13-ஏ, அரசியல் கட்சிகளுக்கு வீடு போன்ற சொத்துக்கள், நன்கொடைகள், மூலதன வருவாய்கள், பிற இனங்களில் வருகிற வருவாய் போன்றவற்றுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விதிவிலக்கு வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் அரசியல் கட்சிகள் அனுப்பியவரின் பெயர் கூறாமல் நிதி நன்கொடைகளை பெறுவதற்கு அரசியல் சாசனமோ, பிற சட்டங்களோ எந்தவொரு தடையையும் விதிக்கவில்லை. இருப்பினும் 1951ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 29 சி-யின்படி அநாமதேயமாக வருகிற நிதி
நன்கொடைக்கு முறைமுகமான தடையானது உள்ளது. அதுவும் நிதியாக வருகிற ரூ.20 ஆயிரத்துக்கு மேற்பட்ட நன்கொடைகள் குறித்து சுய பிரமாண வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று மட்டுமே மத்திய அரசு கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.