2 தொகுதியில் ஒரே வேட்பாளர் போட்டியிட தடை விதிக்கலாம்... சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்!
தேர்தல்களில் ஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டெல்லி : ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு தடை விதிக்கலாம் தற்போதைய சட்டங்கள் இதற்கு அனுமதி அளிப்பதாக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் போட்டியிடுவதற்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் தாக்கல் செய்யும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 33(7) மக்கள் பிரநிதித்துவ சட்டப்படி அரசியல்வாதிகள் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற விதியை செயல்படுத்தலாம். ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறும் பட்சத்தில், ஒரு தொகுதியில் இருந்து அந்த வேட்பாளர் ராஜினாமா செய்துவிடுகிறார். இதனால் அந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.
இதனால் தேர்தல் ஆணையத்திற்கு நேர விரயம், பண விரயம் ஏற்படுகிறது. இதே போன்று அந்தத் தொகுதியில் வாக்களித்த மக்களுக்கும் அந்த வேட்பாளர் இழைக்கும் மிகப்பெரிய அநீதியும் கூட என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சட்ட விதியின் படியே ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதியில் போட்டியிடலாம் என்ற முறை பின்பற்றப்படும் பட்சத்தில் சட்டத்தில் சில மாற்றத்தை கொண்டு வரலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறும் வேட்பாளர் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்யும் போது அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் செலவு முழுவதையும் அந்த வேட்பாளரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற திருத்தத்தை கொண்டு வரலாம் என்றும் தேர்தல் ஆணையம் பதிலில் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் ஆணைய தகவலின்படி சட்டசபை தேர்தல் நடத்த ரூ. 5 லட்சமும், பொதுத்தேர்தல் நடத்த ரூ. 10 லட்சமும் செலவு செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ளது.