அத்வானி யாரை மனதில் வைத்து 'நெருக்கடி' நிலை பற்றி பேசினார்?: சிவசேனா கேள்வி
மும்பை: நெருக்கடி நிலை மீண்டும் வராது என கூற முடியாது என்று யாரை மனதில் வைத்து தெரிவித்தீர்கள் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானியிடம் சிவ சேனா கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து சிவசேனாவின் நாளிதழான சாம்னாவில் கூறியிருப்பதாவது,
நெருக்கடி நிலை மீண்டும் வராது என கூற முடியாது என்று அத்வானி கூறியுள்ளார். அவர் நிச்சயம் யாரையோ நினைத்து தான் அவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது கேள்வி என்னவென்றால் அத்வானி யாரை நினைத்து கூறினார் என்பது தான். நாட்டின் மூத்த அரசியல் தலைவர் அத்வானி. அவர் பல்வேறு சூழ்நிலைகளை பார்த்துள்ளார்.
அவர் தற்போது அரசியலில் அவ்வளவாக ஈடுபடாவிட்டாலும் அவரின் பேச்சை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. அவரின் நெருக்கடி பேச்சால் தற்போது அனைவரின் கவனமும் அவர் மீது தான் உள்ளது.
அவர் பாஜகவின் உட்கட்சி நிலையை பற்றி கூறினால் அதை அவர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் முன்பு முரளி மனோகர் ஜோஷி மற்றும் கிர்தி ஆசாத் ஆகியோரும் இது போன்று பேசியுள்ளனர். நெருக்கடி நிலையை நேரில் பார்த்த அத்வானி ஏன் மீண்டும் அந்த நிலை வரலாம் என்றார்.
40 ஆண்டுகள் கழித்து திடீர் என அத்வானி எதற்காக நெருக்கடி நிலை பற்றி பேசியுள்ளார்? என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.