சேகர் ரெட்டியுடன் எடப்பாடிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் தொடர்பு... குடகில் தினகரன் பகீர்
மணல் மாபியா சேகர் ரெட்டியுடன் எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் தொடர்பு இருந்து ஊழல் செய்துள்ளனர் என்று டிடிவி தினகரன் பகிரங்கமாக தெரிவித்தார்.
கூர்க்: மணல் மாபியா சேகர் ரெட்டியுடன் எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் கைகோத்து கொண்டு ஏராளமான ஊழல்களை புரிந்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
முதல்வரை மாற்ற வேண்டும் என கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்துவிட்டு புதுவை விடுதியில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியிருந்தனர். இந்நிலையில் அங்கிருந்து கர்நாடக மாநிலம் குடகில் உள்ள விடுதியில் தற்போது தங்கியுள்ளனர்.
கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கடந்த சில நாள்களுக்கு முன் 18 பேரின் பதவியும் பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து எம்எல்ஏ பதவி பறிபோன விரக்தியில் உள்ள எம்எல்ஏக்களுக்கு ஆறுதல் கூற டிடிவி தினகரன் கூர்க் விடுதிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
துரோகம்
கூர்க்கில் செய்தியாளர்களிடம் தினகரன் பேசுகையில், எடப்பாடி சசிகலாவுக்கு பச்சை துரோகம் செய்துவிட்டார். எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் சேகர் ரெட்டியுடன் தொடர்புடையவர்கள்.
முறைகேடு
எடப்பாடியின் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு அவரது மகனும், அவரது சம்பந்தியும் சேகர் ரெட்டியுடன் சேர்ந்து ஏராளமான முறைகேடுகளில் சிக்கியுள்ளனர். இது சேகர் ரெட்டி குறித்து வைத்துள்ள டைரியில் உள்ளது. இதன் மூலம் எடப்பாடி குடும்பத்தினரும், ஓபிஎஸ்ஸும் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர்.
பாஜகவுக்கு தலையாட்டு
இதேபோல் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் ரெய்டு நடந்தது. இந்த முறைகேடுகளுக்கும், ரெய்டுக்கும் பயந்து கொண்டுதான் பாஜக சொல்வதை கேட்டுக் கொண்டு இவர்கள் தலையாட்டி வருகின்றனர்.
ஜானகி அம்மாள்
எம்ஜிஆர் மறைந்தவுடன் அவரது மனைவி ஜானகியம்மாள் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. ஆனால் ஜெயலலிதா மறைந்தவுடன் அதே ராணுவ கட்டுப்பாட்டுடன் அனைவரையும் ஒருங்கிணைத்து ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக்கியது சசிகலாதான். அதை அவர்கள் மறந்துவிட்டனர் என்றார் டிடிவி தினகரன்.