தப்பியோடிய பாட்னா குண்டுவெடிப்பு குற்றவாளி கைது
பாட்னா: தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணையின் போது தப்பி ஓடிய பாட்னா குண்டுவெடிப்பு குற்றவாளி மெகர் ஆலம் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பங்கேற்ற பாட்னா பொதுக்கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 6 பேர் பலியாகினர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள். இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கலின் கூட்டாளி தெஷீன் அக்தர்தான் இந்த குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
போலீசாரிடம் சிக்கியவர்களில் மெகர் ஆலமை தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரித்து வந்தனர். அப்போது கழிவறைக்கு செல்வதாகக் கூறி ஜன்னல் வழியே அவர் தப்பிவிட்டார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து உள்ளூர் போலீசிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் தப்பியோடிய மெகர் ஆலம் கான்பூரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.