ஜார்க்கண்ட்டில் தேர்தல்.. காங்கிரஸ் எதிர்காலம் என்னவாகும்! ஹரியானா தேர்தல் முடிவால் பெரிய ட்விஸ்ட்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்திருந்த நிலையில், இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் கூட்டணியில் சிக்கல் வரலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக ஜேஎம்எம் கட்சி காங்கிரஸ் உடன் கூட்டணியைச் சீக்கிரம் உறுதி செய்வதிலேயே முனைப்புக் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தான் ஹரியானா மற்றும் காஷ்மீர் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் காஷ்மீரில் "இந்தியா" கூட்டணி ஆட்சியைப் பிடித்த போதிலும் ஹரியானா சட்டசபைத் தேர்தல் முடிவுகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

ஹரியானா தேர்தல்: ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. கிட்டதட்ட அனைத்து எக்ஸிட் போல்களிலும் கூட காங்கிரஸ் கட்சியை ஆட்சியைப் பிடிக்கும் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் கட்சியால் அங்கு பாஜகவை வீழ்த்த முடியவில்லை. இதற்கிடையே இந்தத் தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் கட்சி துவண்டு போய் இருக்கிறது.
ட்விஸ்ட்: இதனால் ஜார்கண்ட், மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தல்களில் தொகுதிப் பங்கீட்டிலும் சிக்கல் ஏற்படலாம் எனச் சொல்லப்பட்டது. ஆனால், அங்கு நேர்மாறான சம்பவங்கள் நடந்து வருகிறது. ஜார்கண்ட்டில் தொகுதிப் பங்கீட்டை சீக்கிரம் இறுதி செய்ய காங்கிரஸ் மட்டுமின்றி ஜேஎம்எம் கட்சியும் முனைப்புக் காட்டுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
"இந்துக்கள் மக்கள் தொகை குறைகிறது.." நெருங்கும் தேர்தல்.. ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி பேச்சு
காங்கிரஸ்: கடந்த முறை ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் போட்டியிட்டது. அதில் 16 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. இந்த முறை 2 இடங்கள் கூடுதலாக 33 இடங்களைக் காங்கிரஸ் கட்சி கேட்கிறதாம்.. கூட்டணி பேச்சுவார்த்தை இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாம். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இதற்காக டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனையும் நடத்தி இருந்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து ஹேமந்த் சோரன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
என்ன காரணம்: எதிர்க்கட்சிகள் ஒரே அணியாக நிற்க வேண்டும் என்பதையே ஹரியானா தேர்தல் முடிவுகள் காட்டுவதாக ஜேஎம்எம் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து அவர் மேலும் கூறுகையில், "ஹரியானா தேர்தல் முடிவுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஜார்க்கண்ட்டில் இந்தியா கூட்டணி இணைந்து போட்டியிட வேண்டும். கூட்டணியில் ஏதாவது சலசலப்பு ஏற்பட்டால் ஹரியானாவில் நடந்ததே நடக்கும் ஆபத்து உள்ளது" என்று குறிப்பிட்டார்.
கடந்த தேர்தல்: தற்போதுள்ள சூழலில் ஜேஎம்எம் கட்சி 43 இடங்களில் போட்டியிடத் திட்டமிடுகிறது. காங்கிரஸ் கட்சி 33 இடங்களைக் கோரும் நிலையில், ஆர்ஜேடி கட்சியும் 14 இடங்கள் கேட்கிறதாம். முன்னதாக கடந்த 2019ல் நடந்த ஜார்கண்ட் சட்டசபைத் தேர்தலில் ஜேஎம்எம் 43 இடங்களில் போட்டியிட்டது. அதில் 30 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 31 இடங்களில் போட்டியிட்ட நிலையில், 16ல் வென்றது. ஆர்ஜேடி கட்சி ஏழு போட்டியிட்ட நிலையில், அதில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications