இப்போ தோற்றிருக்கலாம்.. லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு காத்திருக்கிறது அகிலேஷ் சவால்! ஏன் தெரியுமா?
நடந்து முடிந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. ஆனால், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி மீது அனைவரின் பார்வையும் திரும்பி இருக்கிறது. காரணம் கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலை விட கூடுதலாக 70 இடங்களை அக்கட்சி கைப்பற்றி இருக்கிறது. அதேபோல் அக்கட்சியின் வாக்கு சதவீதமும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் அக்கட்சியின் முக்கியத்துவத்தை உயர்த்தி இருக்கிறது.

சமாஜ்வாடியின் தொடக்கம்
அகிலேஷ் யாதவ் இம்முறை பெற்றுள்ள வாக்கு சதவீதம் என்பது அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் பெற்ற வாக்கு விகிதத்தை விட அதிகம். 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சமாஜ்வாடி கட்சி 1993 சட்டப்பேரவைத் தேர்தலில் 17% வாக்குகளை பெற்றது. 1996 தேர்தலில் முலாயம் சிங் யாதவ் தலைமையில் தேர்தலில் போட்டியிட்ட சமாஜ்வாடியின் வாக்கு விகிதம் 21.8% ஆக உயர்ந்தது.

அகிலேஷின் கையில் சமாஜ்வாடி
2002 தேர்தலில் 25.37% ஆகவும், 2007 தேர்தலில் 25.43% ஆகவும் அக்கட்சியின் வாக்கு சதவீதம் உயர்ந்தது. பின்னர் 2012 தேர்தலில் முலாயம் சிங் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் போட்டியிட்ட சமாஜ்வாடி 29.15 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சியையும் கைப்பற்றியது. இளம் வயதில் முதலமைச்சரானார் அகிலேஷ் யாதவ்.

2017 தேர்தல் தோல்வி:
அதன் பிறகு தந்தை முலாயம் சிங் உடனான மோதல் மற்றும் உட்கட்சிப்பூசல் காரணமாக 2017 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்த அகிலேஷ் யாதவ், வாக்கு சதவீதத்தையும் 21.82% என்ற அளவில் இழந்தார். யோகி ஆதித்யநாத்தின் அதிரடி அரசியல் காரணமாக சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளால் எழுந்து வர முடியாது என்ற பேச்சு எழுந்தது.

அகிலேஷின் மறு எழுச்சி?
ஆனால், அகிலேஷ் யாதவ் கடந்த 5 ஆண்டு காலத்தில் பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டார். மாயாவதியுடன் இணக்கமாக இருந்து அரசியல் செய்து பார்த்தார். சில சமயங்களில் காங்கிரஸுடன் சேர்ந்து கொண்டார். சிறிய கட்சியான தேசிய லோக் தளத்துடன் கூட்டணி அமைத்தார். அதன் பின்னர் பாஜகவின் பாணியை பின்பற்றி அவர் அமைத்த சாதி கூட்டணிதான் சமாஜ்வாடிக்கு இத்தேர்தலில் பெரும் வாக்கு சதவீதத்தை பெற்றுக்கொடுத்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட சாதிகளுடன் சமாஜ்வாடி கூட்டணி:
மத அமைப்புகளோடும், மடங்களோடும், சாமியார்களோடும், உயர்சாதியினரோடும் இணக்கமாக இருந்து அவர்கள் ஆதரவோடு வட மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி வந்த பாஜகவின் பாணியை கையில் எடுத்தார் அகிலேஷ். அவர் உபியில் குறிவைத்தது பெரும்பான்மையாக வசிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை. அதன் விளைவாகவே பாஜகவில் இருந்த பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தேர்தலுக்கு முன்பாக சமாஜ்வாடிக்கு தாவினர். விளைவு, நடந்து முடிந்த தேர்தலில் 36.1% என்ற பெரும் வாக்கு விகிதத்துடன் சக்திவாய்ந்த எதிர்க்கட்சியாக மாறியுள்ளது சமாஜ்வாடி.

உ.பியில் பாஜகவுக்கு எதிரான அலை:
பாஜகவின் கோட்டையாக உருமாறியுள்ளதாக பேசப்பட்டு வரும் உத்தரப்பிரதேசத்தில் அக்கட்சிக்கு எதிரான அலை உருவாகியுள்ளதையே அகிலேஷ் பெற்றுள்ள வாக்கு விகிதம் காட்டுகிறது. பெண்கள் பாதுகாப்பு, பட்டியலினத்தவர்கள் மீதான ஒடுக்குமுறை, வேலையிழப்பு, அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை என அனைத்தும் பாஜகவுக்கு எதிராக திரும்பி இருக்கிறது.

2024 மக்களவைத் தேர்தலுக்கு விதைபோடும் அகிலேஷின் வெற்றி:
சிறிய கட்சிகளுடன் அகிலேஷ் அமைத்த கூட்டணி பெரும் பலனை இந்த தேர்தலில் அவருக்கு பெற்றுக்கொடுத்து உள்ளது. குறிப்பாக ஆவாத் புந்தேல்கண்ட் மற்றும் வட கிழக்கு உபியில் அக்கட்சி 13% வாக்குகளையும், கிழக்கு உபியில் 15 சதவீத வாக்குகளையும் மேற்கு உபியில் 18% வாக்குகளையும் சமாஜ்வாடி பெற்றுள்ளது. உத்தரப்பிரதேசத் தேர்தல் முடிவுகளை வைத்து 2024 மக்களவைத் தேர்தல் பணிகளை தொடங்கலாம் என கணக்கிட்டு வந்த கட்சிகளை அகிலேஷ் யாதவ் பெற்றுள்ள வாக்கு விகிதம் புருவம் உயர்த்த வைத்துள்ளது. வரும் தேர்தலில் அவர் தேசிய அரசியல் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார்.

சமாஜ்வாடியை நோக்கி காங்கிரஸ் நகர வாய்ப்பு:
நடந்து முடிந்த உ.பி தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். இதே போல் பாஜகவுக்கு மாற்று அணியை உருவாக்க முயன்றுவரும் மாநிலக் கட்சிகளும் அகிலேஷிடம் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட முனைப்பு காட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக பாஜகவை வீழ்த்த காங்கிரஸும் சமாஜ்வாடியை நோக்கி நகரும் வாய்ப்பு இருப்பதாக கருதுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ஒட்டுமொத்தத்தில் அகிலேஷ் யாதவ் தேர்தலில் தோற்றாலும் அவரது யுக்தி வெற்றிபெற்று இருப்பது, 2024 மக்களவைத் தேர்தலுக்கான நம்பிக்கையை எதிர்க்கட்சிகளுக்கு கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications