தனிநபர் பத்திரம் தாக்கல் செய்ய விவசாயிகளுக்கு நோட்டீஸ்... உ.பி.அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு!
அலகாபாத்: உத்தர பிரதேசத்தில் தனிநபர் பத்திரம் தாக்கல் செய்ய விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது தொடர்பாக உ.பி.அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
உத்தப்பிரதேசம் சீதாபூர் மாவட்ட நிர்வாகம் போராட்டத்தை தடுக்கும் வகையில் விவசாயிகளிடம் ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரையிலான மிகைப்படுத்தப்பட்ட தனிநபர் பத்திரங்களை கொடுக்க வேண்டும் என கூறியது.
மேலும் விவசாயிகள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாதபடி சுற்றிலும் போலீசார் நின்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அது தோல்வியில்தான் முடிந்து வருகிறது.
டிராக்டர் பேரணி
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் திட்டமிட்டபடி நேற்று முன்தினம் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் சமூக விரோதிகள் புகுந்தனர். இதனால் போராட்டம் திசை மாறியது. போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினார்கள். டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாய சங்க கொடிகள் ஏற்றப்பட்டன. டெல்லி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
உத்தரபிரதேச விவசாயிகள்
முன்னதாக உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்ட விவசாயிகள் போராட்டங்கள் நடத்தவும், டிராக்டர் பேரணியில் கலந்து கொள்ளவும் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் விவசாயிகள் போராட்டத்தை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த முடிவு செய்தனர்.இதனை தொடர்ந்து கடந்த 19-ம் தேதி மாவட்டம் முழுவதும் டிராக்டர்கள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு சீதாபூர் மாவட்ட நிர்வாகிகள், போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.
ரூ.10 லட்சம் வரை தனிநபர் பத்திரங்கள்
அந்த நோட்டிஸில், ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரையிலான மிகைப்படுத்தப்பட்ட தனிநபர் பத்திரங்களை விவசாயிகள் கொடுக்க வேண்டும் என்றும் இரண்டு ஜாமீன்களையும் வழங்குமாறும் கூறியது. மேலும் அந்த விவசாயிகள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாதபடி சுற்றிலும் போலீசார் நின்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அலகாபாத்தில் உள்ள ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஐகோர்ட்டு உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரமேஷ் சின்ஹா மற்றும் ராஜீவ் சிங் ஆகியோர், 'எந்த சூழ்நிலையில் விவசாயிகளிடம் இதுபோன்ற "அதிகப்படியான" தனிப்பட்ட பத்திரத்தையும் இரண்டு ஜாமீன்களையும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது .போலீசார் சுற்றிவளைத்து விவசாயிகள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வர அனுமதிக்காததால் ஒரு நபரின் அடிப்படை உரிமைகளையும் பறிக்கிறார்கள் என்று கூறினர். இதனை தொடந்து பிப்ரவரி 2-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள், இது தொடர்பாக உத்தரபிரதேச மாநில அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.