அது ரிசர்வ் பேங்கா இல்லை "ரிவர்ஸ்" பேங்கா! கள்ளநோட்டில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. மிரண்டுபோன குஜராத்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஆம்புலனஸ் ஒன்றில் போலீசார் சோதனை நடத்திய போது, உள்ளே இருந்ததைப் பார்த்து அவர்களே மிரண்டு விட்டனர்.
குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு இப்போது பாஜக ஆளும் கட்சியாக உள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இது தவிர ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்குக் காலூன்ற முயல்கிறது. இதனால் குஜராத் மாநிலத்தில் பல முனை போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
கஞ்சா விற்பவர்களுடன் கூட்டு களவாணித்தனம்.. அரக்கோணம் டவுன் போலீசார் 3 பேர் சஸ்பெண்ட்
ஆம்புலன்ஸ்
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அங்கு போலீசார் கண்காணிப்பு பணிகளையும் தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாகக் கள்ள நோட்டுகள் புழக்கத்தைத் தடுக்க அம்மாநில போலீசார் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் நேற்றிரவு ஆம்புலன்ஸ் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் கட்டுக்கட்டாக போலி நோட்டுகள் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
கள்ள நோட்டுகள்
அங்கு மொத்தம் இப்படி 25 கோடி ரூபாய் கள்ள நோட்டுகளை மறைத்து எடுத்துச் செல்ல முயன்றதை போலீசார் கண்டுபிடித்தனர். இவை பார்க்க அப்படியே அச்சு அசலாக ஓர்ஜினல் நோட்டுகளைப் போலவே இருந்து உள்ளன. இருப்பினும், அதை உற்றுக் கவனித்த போது தான், அவை போலி நோட்டுகள் என்பது தெரிய வந்து உள்ளது. பொதுவாக ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என ஆங்கிலத்தில் இருக்கும். அதற்குப் பதிலாக இதில் ரிவர்ஸ் பேங்க் ஆஃப் இந்தியா என்று இருந்து உள்ளது.
ரகசியத் தகவல்
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இந்த நோட்டுகள் எங்கு அச்சிடப்பட்டன, யாருக்காக எடுத்துச் செல்லப்பட்டது உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். அகமதாபாத்-மும்பை நெடுஞ்சாலையில் சிலர் போலி நோட்டுகளை எடுத்து வருவதாக முதலில் காம்ரேஜ் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்து உள்ளது.
ஆம்புலன்ஸ் டிரைவர்
அதன்படி அங்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவரை நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர். அந்த ஓட்டுநர் பதற்றமாக முன்னுக்குப் பின் முரனான பதிலை அளித்ததைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அதில் 6 பெட்டிகளில் போலி நோட்டுகள் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
25 கோடி ரூபாய்
மொத்தம் 1290 பாக்கெட்களில் இரண்டாயிரம் ரூபாய் போலி நோட்டுகள் அங்கு இருந்து உள்ளன. இதன் மொத்த மதிப்பு 25.80 கோடியாகும். முதலில் இதைக் கறுப்புப் பணம் என்றே நினைத்து, போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது காவலர் ஒருவர் ரூபாய் நோட்டுகளில் ரிவர்ஸ் பேங்க் ஆஃப் இந்தியா என்று அச்சிடப்பட்டு இருந்ததைக் கண்டுபிடித்தார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.