மயூரநாதா படம் எப்படியாவது ஓடனும்! தோப்புக் கரணம் போட்ட விஜய் ரசிகர்கள்! என்னயா இப்படி இறங்கிட்டீங்க?
மயிலாடுதுறை : தளபதி என்று அன்புடன் ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் வெற்றி அடைய வேண்டி மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில், தோப்புக்கரணம் போட்டு நூதனப் பிரார்த்தனையில் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் திரை உலகில் அதிக ரசிகர்கள் குறிப்பாக இளைஞர் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய் ம்ற்றும் அஜித் நடித்துள்ள வாரிசு மற்றும் துணிவு படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
படம் தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் இருந்தே இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் நேரில் கூட மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இரு படங்களுமே வெற்றி பெற வேண்டும் என பொதுவான ரசிகர்கள் சொல்லி வந்தாலும் வழக்கம் போல விஜய் அஜித் ரசிகர்கள் மோதல் போக்கை கையாண்டு வருகின்றனர்.

வாரிசு விஜய்
விஜய் படத்தின் பாடல்கள் வெளியான போது அது யூட்யூப் மூலம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அதே நேரத்தில் அந்த பாடல்களை அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர். இதை அடுத்து துணிவு படத்தின் பாடல்கள் வெளியான போதும் விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்ததோடு துணிவு படத்தின் டிரைலர் பீஸ்ட் படத்தின் டிரைலர் போல் இருப்பதாக கிண்டல் செய்து வருகின்றனர். மேலும், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் போஸ்டர் யுத்தமும் தொடங்கியுள்ளது.

துணிவு அஜித்
இது தவிர துணிவு படம் வெற்றி பெற வேண்டி கடலுக்கடியில் பேனர் வைப்பது, பழனிக்கு பாதயாத்திரை செல்வது, ஏழுமலையான் கோவிலுக்கு வேண்டுதல், பால்குடம் எடுப்பது என டிசைன் டிசைனாக வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் வெற்றி அடைய வேண்டி மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில், தோப்புக்கரணம் போட்டு நூதனப் பிரார்த்தனையில் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மயுரநாதர் ஆலயம்
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் இன்னும் இரு தினங்களில் திரையிடப்பட உள்ளது இதனை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் பல்வேறு விதமான வேண்டுதல்கள் நிறைவேற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் இன்று விஜய் ரசிகர்கள் மயூரநாதர் அபயாம்பிகை அம்பாள் ஆகிய சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்தனர்.

108 தோப்புக்கரணம்
தொடர்ந்து விநாயகர் சன்னதியில் படம் வெற்றி பெற வேண்டி 108 தோப்புக்கரணம் போட்டு வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஆலய வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான ரசிகர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் துணிவு படத்தின் புரோமோசனின் போது நல்ல படத்துக்கு விளம்பரம் எதுக்கு என விஜய் ரசிகர் கிண்டல் செய்த நிலையில், விஜய் படத்துக்கு வேண்டுதல் எதற்கு என கிண்டல் செய்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.












Click it and Unblock the Notifications