ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி தற்கொலை... விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
டெல்லி : டெல்லியில் ஆம் ஆத்மி நடத்திய பேரணியில் விவசாயி ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு டெல்லி போலீசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சி பேரணி நடத்தியது. அப்போது ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த கூட்டத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.

கெஜ்ரிவால் வந்த சிறிது நேரத்திலேயே அருகில் இருந்த மரமொன்றில் ஏறி விவசாயி ஒருவர் தூக்கிட்டு விட்டார். உடனடியாக அங்கிருந்த ஆம் ஆத்மி தொண்டர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு விவசாயியைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயி ராஜஸ்தான் மாநிலம் தவுசாவைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், ‘தனது பயிர்கள் நாசமாகி, தான் திவாலாகி விட்டதாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும்' அவர் எழுதியுள்ளார்.

விவசாயியின் தற்கொலைக்கு போலீசார் தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் சாடல்:
ஆனால், விவசாயியின் தற்கொலையை தடுக்க தவறி விட்டதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. மேலும், விவசாயியின் தற்கொலைக்குப் பின்னரும் பேரணி நடந்தது வெட்கக் கேடானது என்றும் அது விமர்சனம் செய்துள்ளது.

விசாரணைக்கு உத்தரவு:
இதற்கிடையே, விவசாயி தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என டெல்லி போலீசுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக டெல்லி கமிஷனரையும் அவர் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.












Click it and Unblock the Notifications