விலைவாசியை கட்டுப்படுத்தாவிட்டால்.. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடாகிவிடும்.. உஷார்: ஹேமந்த் சோரன்
ராஞ்சி: ‛‛நாட்டில் பணவீக்கத்தை மத்திய பாஜக அரசு கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணங்கள் அதிகரிக்கும்'' என ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் எச்சரிக்கை விடுத்தார்.
ஜார்கண்ட் முதல்வராக இருப்பவர் ஹேமந்த் சோரன். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராகவும் இவர் உள்ளார்.
தமிழகத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும்.. தொடர்ந்து 4 நாட்களுக்கு: வானிலை மையம் அறிவிப்பு
இந்நிலையில்ல நேற்று ஜார்கண்ட் சட்டசபையில் ஹேமந்த் சோரன் பேசினார். அப்போது விலைவாசி உயர்வு, நாட்டின் பணவீக்கம் குறித்து அவர் சில கருத்துகளை தெரிவித்தார். அப்போது அவர் பணவீக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பட்டியலிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது:
சிசுக்கொலைகள் அதிகரிக்கும்
‛‛நாட்டில் பணவீக்கம் அதிகரித்தால் வறுமை தலைவிரித்தாடும். சிலர் கூறுவதை போல் பெண் குழந்தைகளை சுமையாக நினைக்கும் சூழல் ஏற்படலாம். எனவே பணவீக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் பெண் சிசுக்கொலை, குழந்தைகள் திருமணங்கள் அதிகரிக்கும். மேலும் பணவீக்கத்தால் நாட்டு மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். இது குழந்தைகளுக்கு கல்வி உள்பட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலையை ஏற்படுத்தும். இதனால் மத்திய அரசு பணவீக்கம், விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
முன்னேற்றம்
பணவீக்கத்தால் நாட்டில் உள்ள ஆதிவாசிகள், ஆதிதிராவிடர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிகமாக பாதிக்கப்படுவர். வறுமையில் வாடும் இவர்களை முன்னேற்ற மாநிலங்கள் முயற்சிக்கும்போது தேசம் முன்னேற்ற பாதையில் செல்லாவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை'' என்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன் எப்படி
ஹேமந்த் சோரன் சில காலமாக பாஜகவை தாக்கி பேசி வருகிறார். கடந்த ஆண்டு கொரோனா தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவரை தொடர்பு கொண்டு பேசினார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இன்று மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி என்னை அழைத்து பேசினார். அவர் தனது 'மன் கி பாத்' குறித்து மட்டுமே பேசினார். வணிகம், மாநில பிரச்சனைகள் குறித்து கேட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்'' என குறிப்பிட்டு இருந்தார்.
சமாஜ்வாதி, காங்கிரஸ்
பணவீக்கம், விலையேற்றம் தொடர்பாக மத்திய பாஜக அரசின் மீது தற்போது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. சமீபத்தில் உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‛ டீசல், பெட்ரோல், காஸ் சிலிண்டர், கல்வி, மருந்து, உணவுகளின் விலை உயர்ந்துவிட்டது. இது பாஜகவின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது' என விமர்சித்து இருந்தார். காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛காஸ், டீசல், பெட்ரோல் விலையை அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. பணவீக்க தொற்றுநோய் பற்றி பிரதமரிடம் கேட்க வேண்டும்'' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.