வாரணாசியில் கங்கை ஆரத்தியை ஹெலிகாப்டர் கேமரா மூலம் படம் பிடித்த 4 பேர் யார்?
வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புனித நதியான கங்கையில் நடைபெறும் ஆரத்தியை ஹெலிகாப்டர் கேமரா மூலம் அனுமதியின்றி படம் பிடித்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாரணாசியில் தஸ்ஹஸ்மதி என்ற நுழைவுவாயிலில் இருந்து கங்கை நதியை ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். லோக்சபா தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சி வென்ற பின்னர் பிரதமர் நரேந்திரமோடி இதே இடத்தில் இருந்து தான் கங்கை நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினார்.
கங்கை ஆரத்தி எடுக்கும் பிரதான நுழைவாயிலில் நேற்று முன்தினம் மாலையில் 4 பேர் எந்தவித அனுமதியும் பெறாமல் சிறிய ஹெலிகாப்டர் கேமரா மூலம் வீடியோ படம் எடுத்துக்கொண்டிருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த உளவுத்துறை போலீசார் அவர்கள் 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
அவர்களிடம் இருந்து 2 வாக்கி-டாக்கி போன் மற்றும் மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்களில் ஒருவர் டெல்லியைச்சேர்ந்தவர் மற்றொருவர் மும்பையை சேர்ந்தவர் என்றும் மற்ற 2 பேர் ஹரியானாவை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சர்வதேச சுற்றுலா டெலிவிஷன் சேனலுக்காக ஆவணப் படம் எடுத்ததாகவும், அலகாபாத், வாரணாசி, ஷிம்லா, மனாலி மற்றும் ஆக்ரா பகுதியிலும் படம் எடுத்ததாகவும் போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் அவர்களின் பின்னணி குறித்தும் அனுமதி பெறாமல் ஏன் படம் பிடித்தனர் என்பது குறித்தும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.