துப்பாக்கிச் சூடு நடந்த கோழிக்கோடு விமான நிலையத்தில் இயல்பு நிலை திரும்பியது
கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் விமான நிலைய ஊழியர்களிடையேயான மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்து, அதில் ஒருவர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து மூடப்பட்ட விமான நிலையம் தற்போது இயல்பான முறையில் மீண்டும் செயல்படுகிறது.
கோழிக்கோடு கரிபூர் விமான நிலையத்தில் புதன்கிழமை இரவு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய ஊழியர்களிடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றி மோதலாக வெடித்தது. அப்போது மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவரது துப்பாக்கி தவறுதலாக வெடித்துள்ளது.

இதில் எஸ்.எஸ். யாதவ் (52) என்ற தொழில் பாதுகாப்பு படை வீரர் படுகாயமடைந்தார். பினர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் விமான நிலைய ஊழியர்கள் இருவர் படுகாயமடைந்தனர். இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்திறங்க வேண்டிய விமானங்கள் கொச்சி விமானத்துக்கு திருப்பிவிடப்பட்டன. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இ்ச்சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையம் மூடப்பட்டது. பின்னர் நிலைமை சரியானதும் மீண்டும் விமான நிலையம் திறக்கப்படுவதாக விமான நிலைய இயக்குநர் ஜனார்த்தனன் தெரிவித்தார்.
காரணம் என்ன?
சம்பவத்தின்போது, விமான நிலைய ஆணையகத்தின் தீயணைப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் விமான நிலையத்துக்குள் செல்ல முயன்றபோது அவருக்கு சோதனை நடத்த சிஐஎஸ்எப் வீரர்கள் முயன்றனர். இதற்கு விமான நிலைய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடும் வாக்குவாதம் மூண்டு பின்னர் அது மோதலாக மாறி விட்டது.
சிஐஎஸ்எப் இன்ஸ்பெக்டர் சீதாராம் செளதிரிக்கும், விமான நிலைய ஊழியர் அஜி குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது செளதிரி தனது துப்பாக்கியைத் தூக்கிக் காட்டி சுட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் விமான நிலைய ஊழியர்கள் கோபமடைந்து அவர் மீது பாய்ந்துள்ளனர். அதில் செளதிரியின் துப்பாக்கி கை தவறி வெடித்து யாதவ் உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications