குஜராத் கப்பல் உடைக்கும் தளத்தில் தீ விபத்து: 5 பேர் பலி
காந்திநகர்: கப்பல் உடைக்கும் தளத்தில் காஸ் கசிவால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது.
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் அலங் என்ற இடத்தில் கப்பல் உடைக்கும் தளம் இயங்கிவருகிறது. இப்பகுதியில் இன்று திடீரென பெரிய சத்தத்துடன் ஏதோ வெடித்தது. அதில் இருந்து கிளம்பிய தீயில் சிக்கிய கப்பல் உடைப்பு பணியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கப்பல் உடைக்கும் பகுதியில் காஸ் மூலமாக கட்டிங் செய்யப்படுவது வழக்கம். எனவே காஸ் கசிவால்தான் இந்த விபத்து நடந்திருக்கும் என்று தெரிகிறது.
இதை உறுதி செய்யும் விதமாக போலீசார் கூறுகையில், காஸ் கசிவு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக முதல்கட்ட தகவலில் தெரியவந்ததாக தெரிக்கின்றனர். இருப்பினும் காரணத்தை உறுதி செய்ய தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ஆய்வு அறிக்கை கிடைத்தபிறகு விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.