உணவக டெலிவரி பாயின் தொல்லையால் பெங்களூரை விட்டே வெளியேறிய இளம்பெண்
பெங்களூர்: பெங்களூரில் இளம்பெண் ஒருவருக்கு உணவக டெலிவரி பாயால் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் ஊரையே காலி செய்துவிட்டு சென்றுள்ளார்.
அங்கிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் பெங்களூரில் உள்ள கோரமங்களா பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் கோரமங்களாவில் உள்ள உணவகம் ஒன்றின் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். உணவை அந்த உணவகத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் இரவு 10.30 மணிக்கு அங்கிதாவிடம் அளித்துள்ளார்.
அதன் பிறகு அந்த உணவக நபர் அங்கிதாவின் செல்போனுக்கு தொடர்ந்து போன் செய்து தொல்லை கொடுத்துள்ளார். அவரின் எண்ணை பிளாக் செய்தும் அவர் பல்வேறு எண்களில் இருந்து கண்ட நேரங்களில் அங்கிதாவை தொடர்பு கொண்டுள்ளார். இது குறித்து அங்கிதா உணவக உரிமையாளரிடம் புகார் அளிக்க அவர் அந்த நபரை மன்னிப்பு கேட்க வைத்துள்ளார். அப்படியும் அந்த நபர் தனது சேட்டையை நிறுத்தவில்லை.
இது தொடர்பாக அங்கிதா கோரமங்களா போலீசில் புகார் தெரிவித்தும் பலனில்லை. இதையடுத்து அந்த நபருக்கு பயந்து அங்கிதா சில நாட்கள் தனது தோழி வீட்டில் தங்கியுள்ளார். பின்னர் அவர் ஊரை காலி செய்துவிட்டு சென்றுள்ளார். அப்படியும் அந்த நபர் அங்கிதாவுக்கு தொடர்ந்து போன் செய்து தொல்லை கொடுத்து வருகிறார்.
ஓராண்டு காலமாக நடக்கும் இது குறித்து அங்கிதா அண்மையில் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதை பார்த்த பெங்களூர் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் அவரை தொடர்பு கொண்டு அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.