பாஜகவில் இணைந்தார் முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங்
டெல்லி: முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங் இன்று முறைப்படி பாஜகவில் இணைந்து கொண்டார். கட்சியில் சேர்ந்த வேகத்தில் பாஜகவை அவர் வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.
ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்தபோது சிங், வயது குறித்த சர்ச்சையில் சிக்கினார். இதனால் அவருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் இடையே மோதலும் வெடித்தது. வழக்குகளும் தொடரப்பட்டன.
இந்த நிலையில் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் சிங். அதன் பின்னர் அவர் பாஜகவில் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகின. டெல்லி அருகே நடந்த நரேந்திர மோடி கூட்டத்திற்கும் அவர் வந்திருந்தார்.
இந்த நிலையில் இன்று முறைப்படி அவர் பாஜகவில் இணைந்து கொண்டார். பாஜக தலைமை அலுவலகம் சென்று கட்சியில் இணைந்த சிங்கை, மாலை போட்டு வரவேற்றார் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்.
முன்னதாக இந்தியா கேட்டில் உள்ள அமர்ஜவான் ஜோதி நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் சிங். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாட்டுக்குத் தொடர்ந்து சேவையாற்ற விரும்புகிறேன். இதனால்தான் நான் பாஜகவில் இணைந்தேன்.
ராணுவத்திலிருந்து வரும் அனைவருக்குமே நாட்டுப் பற்றும், நாடு குறித்த சிந்தனையும்தான் இருக்கும். நானும் எனது நாட்டுக்காக தொடர்ந்து சேவையாற்றப் போகிறேன். தேசியவாத சிந்தனையும், உணர்வும் மிக்க கட்சியில் நான் இணைந்துள்ளேன். நாட்டை இந்தக் கட்சியின் மூலமாக முன்னெடுத்துச் செல்லப் போகிறேன் என்றார்.
சரி, எம்.பி தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, எனக்குத் தெரியாது. கட்சியே அதுகுறித்து முடிவெடுக்கும் என்றார் சிங்.
2102ம் ஆண்டு மே மாதத்தில் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.