உ.பி-க்கு அடுத்து கோவாவிலும் சிக்கல்.. முன்னாள் பாஜக அமைச்சர் காங்-இல் ஐக்கியம்
பனாஜி: கோவா பாஜக அரசில் அமைச்சராக இருந்த மைக்கேல் லோபோ தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த மறுநாளே, காங்கிரஸில் இணைந்தார்.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் கோவா சட்டசபைக்கு ஒரே கட்டமாக வரும் பிப். 14ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவாவில் இப்போது பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அமைச்சராக இருந்த மைக்கேல் லோபோ திங்கள்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து சில மணி நேரத்தில் மைக்கேல் லோபோ நேற்று (ஜன. 11) காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மைக்கேல் லோபோ தனது மனைவி டெலிலாவுடன் காங்கிரசின் கோவா பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் மற்றும் காங். எதிர்க்கட்சித் தலைவர் திகம்பர் காமத் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மைக்கேல் சியோலிம் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது மைக்கேல் லோபோ பாஜக அமைச்சரவையில் துறைமுக அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்-இல் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மைக்கேல் லோபோ, "கோவாவுக்கு காங்கிரஸ் பல்வேறு நன்மைகளைச் செய்துள்ளது. இப்போதுள்ள சூழலில் நல்ல அரசை விரும்பும் அனைவருக்கும் காங்கிரஸ் மட்டுமே மாற்று. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் 40இல் 25க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும். கோவா மக்கள் பாஜகவை ஆட்சியில் இருந்த அகற்ற முடிவு செய்துவிட்டனர்.
இந்த நிலையைப் பயன்படுத்தி வேறு சில அரசியல் கட்சிகள் கோவாவில் குழப்பத்தை உருவாக்கி பாஜகவுக்கு உதவுகின்றன. இந்த புதிய கட்சிகளுக்குக் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கக் கூடாது என்பது ஒரே நோக்கம். அவர்களுக்குத் தொங்கு சட்டசபை உருவாக வேண்டும் என்பதே விருப்பம். அவர்களிடம் எந்தவொரு திட்டமும் இல்லை.
பாஜக அமைச்சரவையில் இருந்த போதிலும், அரசு மக்களுக்கு எதிரான திட்டங்களை நான் எதிர்த்தே வந்துள்ளேன். காங். கட்சியில் இருந்து சிலர் புதிய கட்சிகளுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் காங்கிரஸ் தான் மாற்று என்பதை உணர தொடங்கியுள்ளனர். அவர்கள் விரைவில் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்புவார்கள்" என்றார்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் உத்தரப் பிரதேசத்தில் அமைச்சர் உட்பட 5 பேர் பாஜகவில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications