கண்ணாமூச்சி விளையாடிய முன்னாள் நீதிபதி கர்ணன்... கைதாவதற்கு முன் கொச்சியில் ஓய்வு!
உச்சநீதிமன்ற உத்தரவுபடி கைது செய்யப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணன் கைது செய்யப்படுவதற்கு முன்னர் கொச்சியில் உள்ள விடுதியில் 3 நாட்கள் ஓய்வெடுத்தது தெரிய வந்துள்ளது.
திருவனந்தபுரம் : கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்த முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 3 நாட்கள் கொச்சி புறநகரில் உள்ள ஆடம்பர விடுதியில் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், எட்டு ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றியவர், சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன். இவர் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன்கவுல் உள்பட பல நீதிபதிகள் ஊழல் செய்வதாக, 2015 ஆம் ஆண்டு பிரதமருக்குக் கடிதம் எழுதினார். இவரின் இந்தச் செயல்பாடு, நீதிமன்றத்தை அவமதிப்பதாக உச்சநீதிமன்றம் கருதியது. எனவே, உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து கர்ணன்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது.
கர்ணனுக்கு மனநல பரிசோதனை
இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குக் கர்ணன் முழுமையாக ஒத்துழைக்காத நிலையில், நீதிபதி கர்ணனின் மனநலம்குறித்து, கொல்கத்தா அரசு மருத்துவர்கள் பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் மனநலப் பரிசோதனைக்குக் கர்ணன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
தலைமறைவு
இதனையடுத்து நீதிபதி கர்ணனை கைது செய்து 6 மாதம் சிறையில் அடைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற இந்த உத்தரவு வருவதற்கு முன்னரே சென்னை வந்த நீதிபதி கர்ணன் மேற்குவங்க போலீசார் சென்னை வரும் முன்னரே தலைமறைவானார். தலைமறைவான காலகட்டத்தில் பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்குச் சில காலங்களே உள்ளதால், கைது உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை,இது குடியரசுத் தலைவருக்கு அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கோவையில் பதுங்கல்
தொடர்ந்து தலைமறைவாக இருந்த நீதிபதி கர்ணனை மேற்குவங்க போலீசார் தமிழகத்தில் தங்கியிருந்து தேடி வந்தனர். இதற்கிடையே நீதிபதி கர்ணனின் பதவிக்காலம் முடிந்தது. ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்கிடைத்து.
சொகுசு விடுதியில் கைது
இந்த தகவலின் அடிப்படையில் கோவை வந்த மேற்கு வங்க காவல்துறையினர் தமிழக காவல்துறையின் உதவியுடன் கோவை மலூமிச்சம்பட்டி பகுதியில் உள்ள கோல்டன் சொகுசு விடுதியில் மறைந்திருந்த கர்ணனை கைது செய்தனர். சென்னை அழைத்து வரப்பட்ட கர்ணன் விடிய விடிய விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டார்.
கொச்சி ரெஸ்டாரண்ட்டில் 3 நாட்கள்
கோவையில் கைது செய்வதற்கு முன்னர் முன்னாள் நீதிபதி கர்ணன் ஜூன் 11 முதல் 14வரை 4 நாட்கள் கொச்சி புறநகர் பகுதியான சந்தம்மமாவில் லேக் சிம்போனி என்ற ரெஷ்டாரண்ட்டில் தங்கி இருந்துள்ளார். சென்னையை சேர்ந்த ஏ.எம்.ராஜ் என்ற பெயரில் ஆன்லைன் மூலம் இந்த விடுதியில் ரூம் புக் செய்யப்பட்டுள்ளது.
தப்பியோட்டம்
ஒரு நாளைக்கு ரூ.3 ஆயிரத்து 800 என்ற வாடகைக்கு பிரீமியம் ரூம் எடுத்து தங்கியிருந்த நீதிபதி கர்ணனுடன் அவரது 2 நண்பர்களும் தங்கியிருந்துள்ளனர். நீதிபதி கர்ணன் தங்கியிருந்த தகவல் கிடைத்து போலீசார் அங்கு வருவதற்கு முன்னர் ஜூன் 14ம் தேதி மாலையே ரூமை காலி செய்து விட்டார் கர்ணன். செய்தித்தாள்களில் வந்த தகவலை வைத்தே நீதிபதி கர்ணன் கொச்சியில் தங்கியிருந்த செய்தி கேரள போலீசாருக்கு தெரிய வந்ததாம்.