முன்னாள் மத்திய அமைச்சரை கட்சியை விட்டே தூக்கி அடித்த பாஜக.. 6 ஆண்டுகள் சஸ்பெண்ட்! என்ன பின்னணி!
பெங்களூர்: கர்நாடக பாஜக எம்.எல்.ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால் பாஜகவில் இருந்து 6 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி பசனகவுடா பட்டீல் மீது பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கை குழு, அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
பாஜக மூத்த தலைவரான பசனகவுடா பாட்டீல் யத்னால் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர். கட்சி நிர்வாகிகள் மீதே தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பாஜகவின் கர்நாடக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா உட்பட தனது சகாக்களை பலமுறை குறிவைத்து விமர்சனம் செய்துள்ளார். இந்நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் மத்திய ஒழுங்குமுறைக் குழு செயலாளர் ஓம் பதக், பசவனப்பா பாட்டீல் யத்னாலை வெளியேற்றும் கடிதத்தில், "பிப்ரவரி 10, 2025 தேதியிட்ட விளக்கம் கேட்கும் நோட்டீஸுக்கு நீங்கள் அளித்த பதிலை கட்சியின் மத்திய ஒழுங்குமுறைக் குழு பரிசீலித்துள்ளது. மேலும், முந்தைய விளக்கம் அளிக்கும் நோட்டீஸ்களின்போது உறுதி அளித்தபடி நடந்து கொள்ளாத காரணத்தால், கட்சி ஒழுக்கத்தை நீங்கள் மீண்டும் மீண்டும் மீறுவதை தீவிரமாகக் கவனித்துள்ளோம்.
அதன்படி, கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில் உங்களை 6 ஆண்டுகளுக்கு நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் இதுவரை வகித்து வந்த அனைத்து கட்சிப் பதவியிலிருந்தும் நீக்கப்படுகிறீர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்துப் பேசியுள்ள பசவனப்பா, "என்னை வெளியேற்றும் முடிவு ஊழல், குடும்ப அரசியல் மற்றும் வடக்கு கர்நாடகாவின் வளர்ச்சிக்கு எதிரான எனது போராட்டத்தைத் தடுக்காது. அதே அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் மக்களுக்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன்," என்று கூறியுள்ளார்.
பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பசனகவுடா பட்டீல் யத்னால், அண்மையில் ரன்யா ராவ் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். "தனது உடல் முழுவதும் எங்கெல்லாம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்த முடியுமோ அதையெல்லாம் ரன்யா ராவ் செய்துள்ளார். சட்டப்பேரவையில் இந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சர்கள் குறித்த விவரத்தை நான் வெளியிடுவேன்.
இந்த கடத்தல் குறித்த முழு விவரத்தை நான் சேகரித்துள்ளேன். தங்கம் எப்படி வாங்கப்பட்டது? அதை ரன்யா ராவ் எப்படி கடத்தி வந்தார். சோதனை சார்ந்த விஷயங்களில் அவருக்கு யார் எல்லாம் உதவினார்கள் என்ற விவரம் என்னிடம் உள்ளது" எனத் தெரிவித்து பரபரப்பைக் கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், கோவிட்-19 தொற்றுநோயின் முதல் அலையின் போது எடியூரப்பா அரசாங்கத்தில் ரூபாய் 40,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக அவர் குற்றம் சாட்டினார். தன்னை கட்சியில் இருந்து வெளியேற்றினால் அந்த முறைகேடுகளை அம்பலப்படுத்துவேன் என்று அவர் முன்பு எச்சரித்திருந்தார்.












Click it and Unblock the Notifications