திருவள்ளுவர் பற்றி கட்டுரை போட்டிக்கு 4 பல்கலை. விருப்பம்: ராஜ்யசபாவில் ஸ்மிருதி இரானி தகவல்
டெல்லி: திருவள்ளுவர் பற்றி கட்டுரை போட்டி நடத்த 4 பல்கலைக்கழகங்கள் விருப்பம் தெரிவித்து இருப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
2000 வருடங்களுக்கு முந்தைய, திருக்குறளின் சிறப்பு மற்றும் அதை எழுதிய திருவள்ளுவரின் பெருமைகள் குறித்த சிந்தனை தமிழர்களை தாண்டி பெரிய அளவில் வெளியே பரப்பப்படவில்லை. இந்நிலையில்தான், திருக்குறளையும், திருவள்ளுவரையும் பிரபலப்படுத்தும் விதமாக மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய மனித வளமேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் மற்றும் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
அதில், திருவள்ளுவரின் வாழ்க்கை குறித்து கட்டுரை போட்டி, கருத்தரங்கம், விவாதங்கள் ஆகியவை நடத்துவதற்கு ஆர்வம் உள்ள கல்வி நிறுவனங்கள் இது குறித்து தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது. இதற்கு ஒரு கல்லூரியும் 4 பல்கலைக்கழகங்களும் விருப்பம் தெரிவித்து இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திருவள்ளுவர் மற்றும் அவருடைய படைப்பு, பற்றி பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் கல்விக் கவுன்சிலின் ஒப்புதல் பெற்று தங்களின் பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு ஏற்கனவே அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications