கேரளாவில் தமிழக பெண் பலாத்காரம்... 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு
கொச்சி: தமிழக பெண் ஒருவரை வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொச்சி அருகே உள்ள களமஞ்சேரி என்ற பகுதியில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலர் குடும்பம் குடும்பமாக தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள். கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அந்த பகுதியை சேர்ந்த அதுல் (23), அனீஷ் (29) ஆகிய 2 பேரும் களமஞ்சேரிக்கு ஆட்டோவில் வந்துள்ளனர். அவர்கள் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை எனக்கூறி 2 தமிழக பெண்களை ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளனர்

ஆட்டோ சிறிது தூரம் சென்ற நிலையில் அந்த ஆட்டோவில் மனோஜ் (22), நியாஸ் (30) என மேலும் இருவர் ஏறிக்கொண்டனர். அவர்களை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த பெண்களில் 60 வயதான மூதாட்டியை கட்டிவைத்த அவர்கள், 37 வயது பெண்ணை 4 பேரும் சேர்ந்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் தங்குவதற்கு வீட்டில் இடம் கொடுத்ததாக வினேஷ் (33), அவருடைய மனைவி ஜாஸ்மின் (32) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு எர்ணாகுளம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீதிபதி நிசார் அகமது, குற்றம் சாட்டப்பட்ட அதுல், அனீஷ், மனோஜ், நியாஸ் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், வினேஷ், ஜாஸ்மின் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டயும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அவர்களுக்கு தலா ரூ.55,000 அபராதமும் விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications