உச்சநீதிமன்றத்தை விமர்சித்த விவகாரம்: மன்னிப்பு கோரினார் வி.கே.சிங்
டெல்லி: தன் வயதுப் பிரச்சினை குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து விமர்சித்துப் பேசிய விகே சிங், நேற்று அதற்காக மன்னிப்பு கேட்டார்.
ஓய்வு பெற்ற தலைமை ராணுவ தளபதி வி.கே.சிங்கின் வயது பிரச்சினை குறித்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அவர் சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் உச்சநீதி மன்ற நீதிபதிகளை விமர்சித்து சில கருத்துகளை வெளியிட்டார். அது குறித்து அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வி.கே.சிங் நேற்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
பேட்டியின்போது தான் தெரிவித்த கருத்துகளுக்கு எந்த வித உள்நோக்கமும் இல்லை என்று குறிப்பிட்ட வி.கே.சிங், நீதிபதிகள் தெய்வத்துக்கு சமமானவர்கள் என்றும், அவர்கள் மீது உயர்ந்த மதிப்பும், மரியாதையும் வைத்து இருப்பதாகவும் கூறினார்.