டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் வீட்டை சோதனையிட கோவா கோர்ட் தடை!
பனாஜி: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் டெல்லி அதிகாரப்பூர்வ இல்லத்தை சோதனை நடத்த கோவா கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கோவாவில் 2006-ஆம் ஆண்டில் அரசு ஊழியரைத் தாக்கியது தொடர்பான வழக்கில் கோவா மாநில முன்னாள் அமைச்சர் பிரான்சிஸ்கோ மிக்கி பச்சேகோவை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை அண்மையில் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

இதையடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிரான்சிஸ்கோ கடந்த 2 வாரங்களாக தலைமறைவாக உள்ளார். அவர் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இல்லத்தில் தான் தலைமறைவாக இருப்பதாக கூறி வழக்கறிஞர் எய்ர்ஸ் ரோட்ரிக்ஸ் கோவா கீழ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இதையடுத்து பிரான்சிஸ்கோவை தேடும் வகையில், டெல்லி அக்பர் சாலையில் உள்ள 10-ஆம் எண் வீட்டில் சோதனை நடத்துமாறு பனாஜி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இல்லத்தை சோதனையிட நீதிமன்றம் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நீதிமன்றம் சோதனையிட உத்தரவிட்ட அந்த இல்லம் ராணுவ சொத்து என்பதால் எங்களால் சோதனையிட இயலாது என்று கோவா மாநில அரசு மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சோதனையிட தடை விதித்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications