15 வருடமாக டேக்கா கொடுத்த பலே ராம் ரஹீம்!... இனி 20 ஆண்டு சிறைவாசம்!!
ஜிலு ஜிலு சாமியார் ராம் ரஹீமுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி. ராம் ரஹீம் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கே சென்று தீர்ப்பளித்துள்ளார்.
பஞ்ச்குலா: பாலியல் வன்கொடுமை வழக்கில் மாடர்ன் சாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஹரியானா சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். 15 ஆண்டு விசாரணைக்கு பிறகு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஆன்மீக குரு, கொடையாளர், பாடகர், விளையாட்டு வீரர், திரைப்பட இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர் பைக் பிரியர் என பன்முக திறமை கொண்டவர் மாடர்ன் சாமியார் ராம் ரஹீம். இவருக்கு உலகெங்கும் சுமார் பல கோடி பக்தர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
பலகோடி பக்தர்கள் இருந்தலும் இரண்டு பெண் சீடர்கள் கொடுத்த பாலியல் புகார், சாமியாரை 20 ஆண்டுகள் சிறைக்கு தள்ளியுள்ளது.

ஆகஸ்ட் 15ல் பிறப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ குருசார் மோடியா கிராமத்தில் 1967 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிறந்த குர்மீத்தை அவரது ஏழு வயதில், தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் ஷா சட்னம் சிங்-ஆல் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1990 ஆம் ஆண்டு, அமைப்பின் தலைவராக குர்மீத் ராம் ரஹிம் சிங்கை ஷா சட்னம் அறிவித்தார்.

சர்ச்சை சாமியார்
ராம் ரஹீமுக்கு திருமணமாகி இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மேலும் ஒரு பெண்ணை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். பல்லாயிரக்கணக்கான சீடர்களை கொண்ட குர்மீத் ராம் ரஹிம் சிங், பல சர்ச்சைகளுக்கும், வழக்குகளுக்கும் சொந்தக்காரராக இருக்கிறார்.

பாலியல் வழக்கு
2002ல் கொலை குற்றத்தில் தொடர்பு, 2014-ல் தனது சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வைத்தது போன்ற சர்ச்சைகளில் சிக்கிய குர்மீத், 2002ல் பெண் சீடர்கள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது.

சினிமா நடிகர்
2014 ஆம் ஆண்டு மெசஞ்சர் ஆப் காட் என்ற படத்தில் நடித்த குர்மீத், அடுத்தடுத்து 3 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். 17 கின்னஸ் சாதனைகள், 27 ஆசிய சாதனைகள் உட்பட 53 சாதனைகளை செய்ததாக குறிப்பிடப்படுகிறார்.

ஜிலு ஜிலு சாமியார்
ஜிலு ஜிலுவென ஆடம்பர ஆடைகளை அணிந்து திறந்தவெளி இசை நிகழ்ச்சிகளில் பாடுவது என பல துறைகளின் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஹைவே லவ் சார்ஜர் என்ற அவரது முதல் இசை ஆல்பம் மில்லியன் கணக்கில் விற்பனை ஆனது.

பாலியல் வழக்கில் தண்டனை
கடந்த வெள்ளிக்கிழமையன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என அறிவித்தது. மேலும், குர்மீத் ராம் ரஹீமிற்கு தண்டனை விவரம் வரும் 28 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ராம் ரஹீமிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி.

வெடித்த வன்முறை
ராம் ரஹீம் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட உடனேயே பஞ்சாப், ஹரியானா ஆகிய இரு மாநிலங்களில் வன்முறை வெடித்தது. ரயில் நிலையங்களுக்கு தீ வைக்கப்பட்டன. பஞ்சாப், ஹரியானா, டெல்லி, ராஜஸ்தானில் வன்முறை பரவியது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 32 பேர் பலியாகினர், 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் தண்டனை அறிவிக்கப்பட்டதால் 4 மாநிலங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிறைவாசம்
மாடர்ன் சாமியாராக வலம் வந்து சர்ச்சைகளில் சிக்கியும், சினிமா ஹீரோவாகவும், பாடகராகவும் வந்து பல கோடி சீடர்களை பெற்றிருந்த சாமியார் ராம் ரஹீம் இனி 20 ஆண்டுகாலம் சிறையில் காலம் தள்ளப்போகிறார். ராம் ரஹீமுக்கு தற்போது 50 வயதாகிறது. அவருக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் கிடைக்காது என்பதுதான் கூடுதல் சிறப்பம்சம். 70வயதில்தான் அவரது சிறைவாசம் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications