கோபால் சுப்பிரமணியம் விவகாரத்தில் பாஜக பழிவாங்கலுடன் செயல்படுகிறது: காங்கிரஸ் சாடல்
டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தை நியமிக்கும் விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி பழிவாங்கல் அரசியலை கடைபிடிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக கோபால் சுப்பிரமணியத்தை நியமிக்க நீதிபதிகள் நியமனக் குழு பரிந்துரைத்தது. ஆனால் இதை மத்தியா அரசு ஏற்க மறுத்தது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லோதா மிகக் கடுமையாக சாடியிருந்தார். தற்போது இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையிலெடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனுசிங்வி, பாரதிய ஜனதா அரசு பழிவாங்கல் அரசியலை கடைபிடிக்கிறது. நல்லவேளை கோபால் சுப்பிரமணியமே நீதிபதிகள் நியமன பரிந்துரை குழுவுக்கு கடிதம் எழுதிவிட்டதால் பாஜக அரசு தப்பிவித்துவிட்டது.
அதே நேரத்தில் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிட்டிருப்பதன் மூலம் கடுமையான எதிர்விளைவுகளையும் பாஜக அரசு ஏற்படுத்தியிருக்கிறது என்றார்.