பற்றி எரியும் டார்ஜிலிங்.. வங்க மொழி கட்டாய பாடத்துக்கு எதிராக போராட்டம்- தடியடி!!
டார்ஜிலிங்: வங்க மொழியை பள்ளிகளில் மேற்கு வங்க அரசு கட்டாய பாடமாக்கியதைக் கண்டித்து டார்ஜிலிங்கில் போராட்டம் வெடித்து பற்றி எரிகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட கூர்க்கா மோர்ச்சாவினர் மீதும் போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். இதில் போலீஸ் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
45 ஆண்டுகளுக்குப் பின்னர் டார்ஜிலிங்கில் மமதா பானர்ஜி அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார். டார்ஜிலிங்கில் கூர்க்கா மோர்ச்சாவினர் ஆதிக்கமே ஓங்கியிருந்தது. தற்போது திரிணாமுல் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்துகிறது.
இதனிடையே மேற்கு வங்க மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் வங்க மொழி கட்டாய பாடம் என அறிவித்தது மமதா பானர்ஜி தலைமையிலான அரசு. ஆனால் டார்ஜிலிங் பகுதியில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
வங்க மொழி கட்டாயத்துக்கு எதிரான போராட்டம் இன்று டார்ஜிலிங்கில் உச்சகட்டத்தை அடைந்தது. அங்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் இடத்தை நோக்கி கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சாவினரின் பேரணி நடத்தினர். அப்போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
இதையடுத்து போலீசார் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சாவினரை தடியடி நடத்தியும் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். இதனால் டார்ஜிலிங்கில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அங்கு வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.