நாடாளுமன்ற இரு சபைகளிலும் எதிரொலித்த தமிழக மீனவர் பிரச்சனை- கச்சத்தீவை மீட்க கோரிக்கை!

நாடாளுமன்ற லோக்சபாவில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய அதிமுக எம்.பி தம்பிதுரை, தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசு செயலற்றதாக இருக்கிறது. இது குறித்து எத்தனையோ கடிதங்களை பிரதமருக்கு முதல்வர் எழுதியிருக்கிறார். ஆனால் மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி இடமான கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பேசுகையில், தமிழக மீனவர் பிரச்சனையாக பார்க்காமல் இந்திய மீனவர் பிரச்சனையாக பார்க்க வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் கமல்நாத், உறுப்பினர்களின் கருத்தை ஏற்கிறோம். இலங்கையால் கைது செய்யப்பட்ட ஏராளமான மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய கைது நடவடிக்கை தொடராத வகையில் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்றார்.
ஆனால் அமைச்சரின் இந்த பதிலுக்கு தமிழக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் ராஜ்யசபாவிலும் தமிழக மீனவர் பிரச்சனை எதிரொலித்தது.
ராஜ்யசபாவில் பேசிய அ.தி.மு.க. எம்.பி, மைத்ரேயன், மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. தமிழக மீனவர்கள் பிரச்சனையை மத்திய அரசு தேசிய பிரச்சனையாக கருதவில்லை. மீனவர்கள் பிரச்சனையை மத்திய அரசு தமிழகம்- இலங்கை இடையிலான பிரச்சனையாக சித்தரிக்கிறது. மீனவர்கள் பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்யசபாவில் பதில் அளிக்க வேண்டும் என்றார்.
தி.மு.க. எம்.பி, கனிமொழி; தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. ஐ.நா.சபையில் அமெரிக்கா கொண்டு வரும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது மத்திய அரசின் நிலைபாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார்
இதேபோல் தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக ராஜ்யசபாவில் விவாதிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications