ஜி.எஸ்.டி.வந்தாலும் வராவிட்டாலும் ஓகே... பெரிய மாற்றம் வந்துவிடாது- சலித்து கொள்ளும் சு.சுவாமி
மும்பை: நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் (ஜி.எஸ்.டி) பொருளாதாரத்தில் எந்த ஒரு பெரிய மாற்றமும் வந்துவிடாது என பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. முறையை அமல்படுத்த முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முயற்சித்தது. தற்போதைய மத்திய பாஜக அரசும் இதனைச் செயல்படுத்த முழு வீச்சில் முயற்சித்து வருகிறது.
தமிழகம் எதிர்ப்பு
ஆனால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்களது சொந்த மாநில வருவாய் பாதிக்கப்படும் என்பதால் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இதைச் சுட்டிக்காட்டியிருந்த நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூட, தமிழகத்தைத் தவிர இதர மாநிலங்கள் ஜி.எஸ்.டி.யை ஆதரிக்கின்றன எனக் கூறியிருந்தார்.
மாற்றம் தராது
இந்த நிலையில் மும்பையில் கருத்தரங்கு ஒன்றில் பேசிய பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, ஜி.எஸ்.டி. என்பது மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துவிடாது; அது அமலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் பிரச்சனை இல்லை என்றார். மேலும் ஜி.எஸ்.டி. என்பது வரிவிதிப்பு முறையை எளிமைப்படுத்துகிற ஒன்றுதான்... அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார்.
அன்று மோடி
அத்துடன் குஜராத் முதல்வராக இருந்த போது பிரதமர் நரேந்திர மோடி ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதற்காக மத்திய அரசுக்கெல்லாம் கடிதமும் எழுதியிருந்தார்.
இன்று ஜெ.
தற்போது அவரே நாட்டின் பிரதமராகிவிட்டார்.. ஜி.எஸ்.டி. மசோதாவையும் கொண்டுவர முயற்சிக்கிறார்... அவரைப் போல தற்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார் என்றும் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டார்.