பக்காபிளான்.. குஜராத் தேர்தலுக்கு ‛ஒன்டே’ தான் இருக்கு.. ஆம்ஆத்மி வேட்பாளர்களை தட்டித்தூக்கும் பாஜக!
காந்தி நகர்: குஜராத்தில் முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் திடீரென்று மாயமான ஆம்ஆத்மி வேட்பாளர் ஒருவர் பாஜகவில் இணைந்து அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்களுக்கு ஷாக் வைத்தியம் அளித்துள்ளார். ஏற்கனவே ஒரு வேட்பாளர் பாஜகவுக்கு ஆதரவாக வேட்புமனுவை வாபஸ் பெற்ற நிலையில் தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் ஆம்ஆத்மி கட்சி திணறி வருகிறது.
குஜராத்தில் 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 1ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 8 ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஆளுநர் ஆர்.என். ரவி உடனடியாக பதவி விலக வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி போர்க்கொடி!
இன்று ஓயும் பிரசாரம்
முதற்கட்ட தேர்தலையொட்டி 89 தொகுதிகளுக்கான தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் என்பது இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியாக காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே மும்முனை போட்டி நடைபெற்று வரும் நிலையில் அந்த கட்சியின் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்முனை போட்டி
இந்த 89 தொகுதிகளை பொறுத்தமட்டில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் 89 தொகுதிகளிலும் பாஜக-காங்கிரஸ் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆம்ஆத்மி சார்பில் 88 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் திடீரென்று வாபஸ் பெற்றார்.
வாபஸ் காரணம் என்ன?
அதாவது ஆம்ஆத்மி சார்பில் 89 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்ட நிலையில் கிழக்கு சூரத் தொகுதியில் ஆம்ஆத்மி வேட்பாளர் கஞ்சன் ஜாரிவாலா தனது வேட்புமனுவை சமீபத்தில் வாபஸ் பெற்றார். இவர் திடீரென்று மாயமான நிலையில் பாஜகவினர் கடத்தியதாக ஆம்ஆத்மி குற்றம்சாட்டிய நிலையில் அவர் மீண்டும் திரும்பி வந்தார். இதையடுத்து அவர் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதன் பின்னணியில் பாஜக இருந்ததாக ஆம்ஆத்மி கூறியது.
ஆம்ஆத்மிக்கு அடுத்த ‛ஷாக்’
இந்நிலையில் தான் தற்போது இன்னொரு ஆம்ஆத்மி வேட்பாளர் அக்கட்சியில் இருந்து கழன்றுள்ளார். அதாவது குட்ச் மாவட்டத்தில் உள்ள அப்தாசா சட்டசபை தொகுதியில் ஆம்ஆத்மி சார்பில் வசந்த் வால்ஜிபாய் கெடானி போட்டியிட்டார். இந்நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருந்து மாயமானார். ஆம்ஆத்மி கட்சியினர், தொண்டர்களால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஆம்ஆத்மிக்கு அடுத்ததாக ஷாக் ஏற்பட்டது.
பாஜகவில் இணைந்த வேட்பாளர்
இந்நிலையில் தான் தற்போது அப்தாசா சட்டசபை தொகுதியின் ஆம்ஆத்மி வேட்பாளர் வால்ஜிபாய் கெடானி தொடர்பான ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில் வசந்த் வால்ஜிபாய் கெடானி பேசுகிறார். அதில், ‛‛நான் ஆம்ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளேன். நாட்டின் நலன் கருத்து இந்த முடிவை எடுத்துள்ளேன். பாஜகவின் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து நான் போட்டியில் இருந்து விலகி கொள்கிறேன்'' என கூறியுள்ளார். இதனால் ஆம்ஆத்மி தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.
தேர்தலுக்கு ஒருநாள் மட்டுமே..
இந்த அப்தாசா சட்டசபை தொகுதிக்கும் முதற்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் குஜராத் முதற்கட்ட தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியின் வேட்பாளர்களின் எண்ணிக்கை என்பது 87 ஆக சரிந்துள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் இந்த கட்சி மாற்றம் நடந்துள்ளதால் குஜராத் தேர்தல் களத்தில் ஆம்ஆத்மி கட்சி திணறி வருகிறது. மேலும் 2ம் கட்ட தேர்தலுக்கு முன்பாக இன்னும் சில வேட்பாளர்கள் பாஜகவில் இணையலாம் என்ற தகவல்கள் பரவுவதால் ஆம்ஆத்மி கலக்கமடைந்துள்ளது.
பாஜக வேட்பாளர் யார்?
அப்தாசா தொகுதியில் பாஜக சார்பில் பிரத்யுமான் சிங் ஜடேஜா போட்டியிடுகிறார். இவர் கடந்த 2017 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு அவர் காங்கிரஸில் இருந்து விலகி 2020ல் பாஜகவில் இணைந்ததும், தற்போது பாஜக சார்பில் மீண்டும் தொகுதியில் போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது.