130-க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கிய குஜராத் பாலம்..காரணம் என்ன? வெளியான 5 முக்கிய பாயிண்டுகள்!
அகமதாபாத்: குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள பாலம் அறுந்து விழுந்ததில் 130-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் 130-க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கிய இந்த தொங்கு பாலம் விபத்துக்கு என்ன காரணம்? என்பது குறித்த 5 முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றை கடப்பதற்காக சுமார் 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் இருந்து வந்தது.
கடந்த 7 மாதங்களாக பாலத்தில் சீரமைப்பு பணி நடந்து வந்த நிலையில் தீபாவளியையொட்டியும் குஜராத் புத்தாண்டு தினமான கடந்த 26-ஆம் தேதி இந்த பாலம் திறக்கப்பட்டது.

அறுந்து விழுந்த பாலம்
குஜராத் மாநிலத்தில் பிரபலமான பாலமாக இது கருதப்படுவதால் விடுமுறை தினமான நேற்று இந்த தொங்கு பாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் இந்த தொங்கு பாலத்தில் இருந்தபடி இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தனர். சுமார் 500 பேர் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் திடீரென பாரம் தாங்காமல் அந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்தது. இதனால் அந்த பாலத்தில் இருந்தவர்கள் தண்ணீரில் விழுந்தனர்.

130-க்கும் மேற்பட்டோர் பலி
ஆற்றுக்குள் விழுந்ததில் பெண்கள், குழந்தைகள் என நீச்சல் தெரியாதவர்கள் தண்ணீரில் மூழ்கினர். பலரும் காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பினர். மேலும் சிலர் தொங்கு பாலத்தில் தொங்கியபடி கரைக்கு சென்றனர். மேலும் சிலர் நீச்சல் அடித்து கரைக்கு சென்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் அப்பகுதிக்கு தேசிய மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

பிட்னஸ் சான்று வழங்குவதற்குள் திறப்பு
இதேபோல் 19 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாலத்தில் சீரமைப்பு பணி முடிந்து 4 நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் பாலம் அறுந்து விழுந்ததால் சீரமைப்பு பணி முறையாக செய்யபடவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறமும், சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது என்றாலும் அதற்கான பிட்னஸ் சான்று அந்த பாலத்திற்கு வழங்கப்பட வில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பாலம் விபத்துக்கு காரணம் என்ன
பிட்னஸ் சான்று வழங்குவதற்குள் இந்த பாலம் திறக்கப்பட்டதால் இந்த விபத்து நடந்துள்ளதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையில் 140-க்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கிய இந்த தொங்கு பாலம் விபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்த 5 முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒரேவா என்ற தனியார் டிரஸ்ட்
தகவல் 1: அரசு ஒப்பந்தத்தை பெற்ற ஒரேவா என்ற தனியார் டிரஸ்ட் பாலத்தை புனரமைக்கும் பணியில் கடந்த வாரம் ஈடுபட்டுள்ளது. புனரமைப்பு பணிகளுக்காக இந்தப் பாலம் 7 மாதங்களுக்கு மூடப்பட்டு இருந்து இருக்கிறது. கடந்த 26 ஆம் தேதிதான் மக்கள் பயன்பாட்டுக்காக பாலம் திறந்துவிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் பெறவில்லை
தகவல் 2: பாலம் புனரமைப்பு பணிகள் முடிந்த பிறகு பாலத்தை திறப்பதற்கு முன்பாக பாலம் நல்ல நிலையில் இருப்பதற்கான தகுதி சான்றிதழை புனரமைப்பு பணியில் ஈடுபட்ட நிறுவனம் அதிகாரிகளிடம் பெறவில்லை என்று மோர்பி நகராட்சி அமைப்பின் தலைவர் சந்திப்ஷின்க் ஸலா தெரிவித்துள்ளார்.

பரிசோதிக்கவில்லை
தகவல் 3: 142- ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் இந்த அரசு ஒப்பந்தத்தை எடுத்த ஒரேவா குழுமம் என்னென்ன புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்ற விவரங்களையும் பாலத்தை திறப்பதற்கு முன்பாக அதன் தரத்தையும் பரிசோதித்து இருக்க வேண்டும். ஆனால், இவ்வாறு செய்யவில்லை. அரசும் இதைப்பற்றி எதுவும் அறிந்து இருக்கவில்லை என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலத்தில் குதித்தனர்
தகவல் 4: பாலத்தில் செல்லும் போது பலரும் குதித்தும் ஒடிச்செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இப்படி அங்கும் இங்கும் ஓடியதால் கேபிள் பாலம் ஊசலாடியதை காண முடிந்தது. இதனால் இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
தகவல் 5: பாலம் கடந்த வாரம் புனரமைக்கப்பட்டது. ஒருவாரத்திற்குள் இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம் என்று அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications