திடீர் 'ஹார்ட் அட்டாக்'.. காரை அப்பளமாக நொறுக்கிய பஸ்! 9 பேர் பலி - குஜராத்தில் பரிதாபம்
காந்திநகர்: குஜராத்தில் டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தறிகெட்டு ஓடிய பஸ் எதிரே வந்த கார் மீது மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 28 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் இழப்பீட்டையும் பிரதமர் அறிவித்துள்ளார்.

மோடி தொடங்கி வைத்த நிகழ்ச்சி
குஜராத் மாநிலம் சூரத்தில் ப்ரமுக் ஸ்வாமி மகாராஜ் சதாப்தி மகோத்சவம் என்ற ஆன்மீக நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் பிரதமர் நரேந்திர மோடி இந்த விழாவைத் தொடங்கி வைத்தார். இதனிடையே, வல்சாட் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேற்று இரவு சுற்றுலா பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

சென்டர் மீடியனை தாண்டி..
இந்நிலையில், நவ்சாரி மாவட்டத்திற்கு அந்த பஸ் இன்று அதிகாலை 4 மணிக்கு வந்து கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்படியே அவர் இருக்கையில் சரிந்துள்ளார். இதனால் பஸ் சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு ஓட்டுநர் கட்டுப்பாடின்றி தறிகெட்டு ஓடியுள்ளது. பஸ்ஸில் இருந்த அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தால் யாருக்கும் இது தெரியவில்லை. பின்னர் அதிவேகமாக ஓடிய பேருந்து சாலை நடுவே உள்ள சென்டர் மீடியனை இடித்துத் தள்ளி, அங்கிருந்த ஒருவழிச் சாலையில் பாய்ந்தது. அப்போது எதிரே வேகமாக வந்து கொண்டிருந்த கார் மீது அந்த பஸ் மோதியது.

9 பேர் பலி
இந்த பயங்கர விபத்தில் கார் அப்பளமாக நொறுங்கியது. இதில் காரில் பயணித்த 9 பேரில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பஸ் ஓட்டுநரும் உயிரிழந்தார். இந்த விபத்தில் பஸ்ஸில் இருந்த 28 பேரும் படுகாயமடைந்தனர். அதிகாலை நேரம் என்பதால் காயமடைந்தவர்களை மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் தகவலறிந்து வந்த போலீஸார், அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மோடி, அமித் ஷா இரங்கல்
இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50000-ம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில், இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications