மோடியின் சொந்த மாநிலம் குஜராத்தில்.. முதல்வரை தவிர எல்லா அமைச்சர்களும் திடீர் ராஜினாமா! என்ன நடக்கிறது
காந்திநகர்: குஜராத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே பாஜகவே ஆட்சியில் இருக்கிறது. இப்போது அங்கு முதல்வர் பூபேந்திர படேல் முதல்வராக இருக்கிறார். இதற்கிடையே அங்கு மாநிலத்தில் முதல்வர் தவிர ஒட்டுமொத்த அமைச்சரவையும் திடீரென ராஜினாமா செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ராஜினாமாவுக்கு என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!
நமது நாட்டின் பிரதமரான மோடியின் சொந்த மாநிலம் குஜராத். கடந்த 2001 முதல் பிரதமராகப் பதவியேற்கும் வரை, அதாவது 2014 வரை மோடி தான் குஜராத் முதல்வராக இருந்தார். அதன் பிறகும் கூட பாஜகவை சேர்ந்தவர்களே முதல்வராக இருக்கிறார்கள். சொல்லப்போனால் அங்கு 1998க்கு பிறகு பாஜக மட்டுமே ஆட்சியை அமைத்துள்ளது.

குஜராத்
அந்தளவுக்கு பாஜக வலிமையான ஒரு மாநிலம் குஜராத். அந்த குஜராத் அரசியலில் தான் இப்போது மிகப் பெரிய மாற்றம் நடந்துள்ளது. அங்கு முதல்வரைத் தவிர அமைச்சரவையில் இருந்த அனைவரும் திடீரென ராஜினாமா செய்துள்ளனர். குஜராத் அமைச்சரவையில் 16 பேர் இருந்த நிலையில், அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். முதல்வர் பூபேந்திர படேல் மட்டுமே தனது பதவியில் நீடிக்கிறார்.
அங்கு சட்டசபைத் தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் அமைச்சரவையை மொத்தமாக மாற்றி அமைக்க பூபேந்திர படேல் முடிவு செய்துள்ளார். இந்த முடிவானது, முதல்வர் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. பாஜக தேசிய தலைமையின் அறிவுறுத்தல் பெயரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அனைவரும் ராஜினாமா
முதலமைச்சரின் இல்லத்தில் வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) சுனில் பன்சல் மற்றும் முதலமைச்சர் படேல் ஆகியோர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு அமைச்சர்களையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து டெல்லி தலைமையின் முடிவை விளக்கியுள்ளனர். அதன் பிறகு, அவர்களது ராஜினாமா கடிதங்கள் பெறப்பட்டன.
புதிய அமைச்சரவை
16 அமைச்சர்களும் முதல்வரிடம் தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்தனர். அதனை ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் முதல்வர் பூபேந்திர படேல் இன்று இரவு அளிக்கிறார். புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நாளை வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் நடைபெற உள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
இந்த புதிய அமைச்சரவையில் இளைஞர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்று இருவருமே இருப்பார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாதி கணக்குகளையும் கருத்தில் கொண்டே இந்த அமைச்சரவை மாற்றம் இருக்குமாம்.
காரணம்
குஜராத்தில் விரைவில் நகராட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளது. அங்கு ஆம் ஆத்மி கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. ஆம் ஆத்மி செல்வாக்கும் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டே அமைச்சரவை மாற்றம் எனத் தெரிகிறது. 2015-ஆம் ஆண்டு நடந்த படேல் இட ஒதுக்கீடு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கோபால் இத்தாலியா பிரபலமடைந்து வருகிறார். இருப்பினும், ஆம் ஆத்மி நகராட்சி தேர்தல்களில் பெரியளவில் வெல்லக்கூடாது என்பதால் பாஜக இந்த முடிவை எடுக்கிறது.
குஜராத்தில் சௌராஷ்டிரா பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி அதிகரித்து வருவதால், ரிவபா ஜடேஜா, ஜெயேஷ் ரடடியா, மற்றும் உதய் கங்கட் உள்ளிட்ட பாஜக இளம் தலைவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications