குஜராத் முதல்வர் ஆனந்தி பென் திடீர் ராஜினாமா முடிவு! அமித் ஷாவுக்கு வாய்ப்பு?
காந்திநகர்: குஜராத் மாநில முதல்வர் ஆனந்தி பென் தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார். அவரது முடிவை பாஜக தலைமை ஏற்றுக்கொண்டுள்ளது.
குஜராத்தில் தொடர்ச்சியாக 3 முறை முதல்வராக பதவி வகித்தவர் நரேந்திர மோடி. அவர் பிரதமராக பதவியேற்றதால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மோடிக்கு பிறகு அந்த பதவிக்கு வந்தவர் ஆனந்தி பென்.
மோடியை போல ஆட்சி நிர்வாகத்திலும், கட்சியை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் ஆனந்தி பென் திறமையானவராக இல்லை. இதனால் பட்டேல்கள் போராட்டத்தை அடக்க முடியாமல் திணறினார். சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் இதன் விளைவுகளை பாஜக சந்தித்தது. 10 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக பாஜகவுக்கு உள்ளாட்சி தேர்தலில் இறங்குமுகம் ஏற்பட்டது.
இந்நிலையில், பசு தோல் வைத்திருந்ததாக தலித் வகுப்பை சேர்ந்த நபர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குஜராத்தை சர்ச்சைக்குறிய மாநிலமாக்கியது.
இந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் 21ம் தேதி தனக்கு 75 வயதாவதை குறிப்பிட்டு, முதல்வர் பதவியை துறக்க சித்தமாக இருப்பதாக ஆனந்தி பென் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பாஜகவுக்கு புதிய முகம் தேவை என்றும், இதற்காக தனது பதவியை விட்டுத்தருவதாகவும் ஆனந்தி பென் குறிப்பிட்டார். மேலும், தனது ராஜினாமா முடிவு பற்றிய கடிதத்தை குஜராத் பாஜக தலைவர், விஜய் ரூபனியிடம் அளித்தார். பாஜக தலைவர்கள் இந்த முடிவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
જય જય ગરવી ગુજરાત pic.twitter.com/S3FAjyCKpy
— Anandiben Patel (@anandibenpatel) August 1, 2016
அடுத்த ஆண்டு குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், அமித் ஷா போன்ற ஒரு பிரபலமானவரை முதல்வராக்கி தேர்தலை சந்திக்க பாஜக தலைமை திட்டமிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.