நாளை தொடங்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தல்.. எத்தனை தொகுதிகளில் வாக்குப்பதிவு.. முழு பின்னணி
காந்திகர்: குஜராத் சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை (டிச.1) விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
குஜராத் தேர்தல் களம் நீண்டகாலத்துக்கு பிறகு மும்முனை போட்டியை சந்திப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்குப்பதிவில் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணயில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். நூற்றுக்கணக்கான துணை ராணுவத்தினரும் குஜராத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் காங். கூட்டத்தில் சீறிய காளை! பதறி ஓடிய தொண்டர்கள்! அவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்த்த பாஜக?
வாழ்வா - சாவா தேர்தல்
எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுவதாலும், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்பதாலும் குஜராத் சட்டமன்றத் தேர்தல் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டு மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தத் தேர்தலில் தேசியக் பாஜக, காங்கிரஸின் வெற்றி - தோல்விகள், மக்களவைத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததுதான். இதனால் இவ்விரு கட்சிகளும் இந்த தேர்தலை வாழ்வா சாவா தேர்தலாகவே எதிர்கொள்கிறது. அதே சமயத்தில், ஆம் ஆத்மியும் களத்தில் குதித்துள்ளதால் குஜராத்தில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
ஆட்சியில் அமர வைக்கும் தொகுதிகள்
மொத்தமுள்ள 181 தொகுதிகளில் நாளை 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள பிராந்தியங்கள் தான் குஜராத்தில் யார் அரியணை ஏறுவது என்பதை தீர்மானிக்கும் தொகுதிகள் அடங்கிய பிராந்தியங்கள் ஆகும். குஜராத்தை பொறுத்தவரை எந்தக் கட்சி குச், சவுராஷ்ட்ரா பிராந்தியங்களில் வெற்றிக்கொடி நாட்டுகிறதோ, அந்தக் கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்பது காலம் காலமாக இருக்கும் நடைமுறை. இந்த பிராந்தியங்களுக்கான வாக்குப்பதிவு முதல்கட்ட தேர்தலிலேயே வருவதால், எந்தக் கட்சி குஜராத்தில் ஆட்சியமைக்க போகிறது என்பது நாளையே முடிவாகிவிடும்.
நட்சத்திர வேட்பாளர்கள்
19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் இதுதான் காத்வி முக்கிய நட்சத்திர வேட்பாளர் ஆவார். இவர் துவாரா மாவட்டத்தில் உள்ள கம்பாளியா தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல், குஜராத் ஆம் ஆத்மி தலைவர் கோபால் இடாலியாவும் களத்தில் உள்ளார். பாஜக சார்பில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபாவும் நட்சத்திர வேட்பாளராக இருக்கிறார்.
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மியை தவிர்த்து, பகுஜன் சமாஜ் கட்சி 57 வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது. பாரதிய பழங்குடியின கட்சி சார்பில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சமாஜ்வாதி கட்சி சார்பில் 12 வேட்பாளர்களும், இந்திய, மார்க்சிஸ்ட் கட்சிகள் சார்பில் தலா 2 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இவர்களை தவிர 339 பேர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்கள். முதல்கட்ட தேர்தலில் 2 கோடி 39 லட்சத்துக்கு 76,670 பேர் வாக்களிக்க இருக்கிறார்கள். அசம்பாவிதங்களை தடுக்க ஆயிரக்கணக்கான போலீஸாரும், துணை ராணுவத்தினரும் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.