தேர்தலில் களமிறங்கிய முன்னாள் ராணுவ வீரர்.. மீசை மட்டுமே இவ்ளோ நீளமா? கலகலக்கும் குஜராத்
காந்திநகர்: குஜராத் தேர்தலில் ஹிம்மத்நகர் தொகுதியிலிருந்து போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மாகன்பாய் சோலங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இவர் முன்னாள் ராணுவ வீரராவார். இவருக்கு நன்கு அடர்த்தியான 2.5 அடி நீள மீசை இருக்கிறது. இதுதான் இவருக்கு தனித்துவத்தை தேடி கொடுத்திருக்கிறது.
தன் வாழ்நாளில் பெரும்பாலான காலங்களை ராணுவத்தில் கழித்திருப்பதாகவும், ராணுவத்தில் சேவை செய்ய முடிந்த தன்னால் நிச்சயம் அரசியலில் இறங்கி மக்களுக்கும் சேவை செய்ய முடியும் என நம்புவதாகவும் மாகன்பாய் சோலங்கி கூறியுள்ளார்.
ஒன்றரை வருஷாமா சொல்லிகிட்டே தான் இருக்காங்க.. எப்போது அமைச்சர் போகிறேன்? உதயநிதி சொன்ன பளீச் பதில்!
மீசைக்கார நண்பா
இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் 19 வயதில் ராணுவத்தில் சேர்ந்தேன். முதலில் இந்த மீசையை எடுத்துவிடலாமா என்று எனக்கு தோன்றியது. ஆனால் எனது உயரதிகாரிகள் எனக்கு சப்போர்ட் செய்தார்கள். இதனால் நான் மீசை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தினேன். ராணுவத்தில் இருக்கும் வரை எனது மீசையை பராமரிக்க எனக்கு தனித் தொகையும் வழங்கப்பட்டது. எனக்கு இப்போது வயது 52 ஆகிறது. நான் கடந்த 2012ல் ராணுவத்திலிருந்து வெளியேறினேன்.
தேவைகள்
இந்த தொகுதியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான கோரிக்கைகள் பல நிலுவையில் இருக்கின்றன. வேலையின்மை, அத்தியாவசிய தேவைகள் இப்படியான கோரிக்கைகள் சம்பந்தமாக மாநில அரசு மௌனமாக இருக்கிறது. நாங்கள் தெருவில் நிற்கிறோம். இத்தனை ஆண்டுகளாக நாட்டிற்காக போராடிய எங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவே எங்களுக்கான தேவையை நாங்களே பூர்த்தி செய்துகொள்ள தற்போது தேர்தலில் போட்டியிடுகிறேன். நான் போட்டியிடுவதற்கு என்னைப் போன்ற முன்னாள் ராணுவ வீரர்கள் உதவி செய்தனர்.
பாஜக ஆதிக்கம்
தற்போது ஆப்பிள் சின்னத்தில் போட்டியிடுகிறேன். இந்த மீசைதான் என்னை சுயேட்சையாக நிற்கவைக்க உதவியது. இதுதான் என்னுடைய அடையாளம் மக்கள் என்னை தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கான அனைத்து தேவைகளையும் நான் பூர்த்தி செய்வேன்" என்று கூறியுள்ளார். குஜராத்தின் ஹிம்மத்நகர் தொகுதியில் கடந்த 2012ம் ஆண்டு ராஜேந்திரசிங் ரஞ்சித்சிங் சாவ்தா என்பவர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். ஆனால் அடுத்தடுத்த தேர்தலிலேயே இவர் பாஜகவுக்கு தாவி விட்டார். இந்த தொகுதியில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையேயான வெற்றி விகிதம் என்பது மிகக் குறைவுதான்.
வெறும் 10 சதவிகிதம்
மாநிலத்தில் முதற்கட்டமாக வரும் டிசம்பர் 1ம் தேதி 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல இரண்டாம் கட்டமாக வரும் டிசம்பர் 5ம் தேதி 93 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்த முறை பாஜக தனது 27 ஆண்டுக்கால ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று முயன்று வருகிறது. அதேபோல காங்கிரஸ் இந்த முறையாவது எப்படியேனும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என திட்டமிட்டுள்ளது. ஏனெனில் கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றிபெற்றிருந்தாலும், காங்கிரசுக்கும் பாஜவுக்குமான வாக்கு இடைவெளி என்பது வெறும் 10 சதவிகிதம்தான்.