தீவிரவாதிகள் உணவு வாங்கி கொடுத்தனர், கண்ணியமாக நடந்தனர்: நர்ஸுகள் பேட்டி
கொச்சி: தீவிரவாதிகள் எங்களுக்கு உணவு வாங்கி கொடுத்தனர், கண்ணியமாக நடந்தனர் என்று ஈராக்கில் இருந்து நாடு திரும்பிய 46 நர்ஸுகள் தெரிவித்துள்ளனர்.
ஈராக்கில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் போராடி வருவதால் அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியுடன் நாடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் திக்ரித் நகரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்த கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 46 நர்ஸுகள் நாடு திரும்பியுள்ளனர்.
பயம்
தீவிரவாதிகள் எங்களை அழைத்துச் சென்றபோது பயந்து நடுங்கினோம். இனி நான் என் வாழ்நாளில் ஈராக் பக்கமே போக மாட்டேன் என்று சான்ட்ரா செபாஸ்டியன் என்ற நர்ஸ் தெரிவித்தார்.
தீவிரவாதிகள்
கடந்த வியாழக்கிழமை துப்பாக்கி ஏந்திய ஆண்கள் மருத்துவமனைக்குள் வந்து 15 நிமிடத்திற்குள் எங்களின் உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியே நிற்கும் பேருந்தில் ஏறுமாறு கூறினர். நாங்கள் வெளியேறிய சில நிமிடங்களி்ல் மருத்துவமனையின் முதல் மற்றும் 3வது மாடி தீப்பிடித்து எரிந்ததை பார்த்தோம் என்று கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சீமா என்ற நர்ஸ் தெரிவித்தார்.
அன்பு
தீவிரவாதிகள் எங்களை கொலை செய்யப் போகிறார்களா இல்லையா என்பது தெரியாமல் இருந்தோம். 8 மணிநேரம் பயணம் செய்து மொசுல் நகரை அடைந்தபோது அவர்களின் அன்பான நடவடிக்கை எங்களை அதிசயிக்க வைத்தது. அவர்கள் வாகனத்தை பல இடங்களில் நிறுத்தி எங்களுக்கு தண்ணீர், பிஸ்கட் மற்றும் உணவு வாங்கி கொடுத்தனர். அவர்களின் நடவடிக்கையை பார்த்த பிறகே எங்களுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால் டிரைவர் மற்றுமொரு நபரிடம் துப்பாக்கி இருந்தது என்று மற்றொரு நர்ஸ் தெரிவித்தார்.
கண்ணியம்
நாங்கள் பெண்கள் என்பதால் தீவிரவாதிகள் எங்களை ஒன்றும் செய்யாமல் கண்ணியமாக நடந்து கொண்டனர் என்று தூத்துக்குடியைச் சேர்ந்த நர்ஸ் மோனிஷா தெரிவித்தார்.