ஹாஜி அலி தர்காவின் கருவறைக்கு பெண்கள் செல்ல மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி
மும்பை: ஹாஜி அலி தர்காவின் கருவறைக்கு பெண்கள் செல்ல மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மும்பை ஹாஜி அலி தர்காவில் ஆண்கள் மட்டுமே வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த 2012ம் ஆண்டிற்கு முன்பு வரை பெண்களும் அனுமதிக்கப்பட்டனர் ஹாஜி அலி தர்காவின் கருவறைக்கு பெண்கள் செல்லக் கூடாது என அனுமதி மறுத்து, தர்கா அறக்கட்டளை கடந்த 2012ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இஸ்லாமிய ஆண் புனிதரின் கல்லறைக்கு அருகே பெண்கள் செல்வது இஸ்லாமியத்தில் மிகப்பெரிய பாவம் என்று கூறி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மேலும் பெண்கள், வழிபாடு நடத்த ஏற்கெனவே அமைத்துள்ள ஏற்பாடுகள் போதுமானது என்றும் தர்கா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
தர்காவின் கருவறைக்குள் பெண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஜாகியா சோமான், நூர்ஜகான் நியாஸ் என்ற இருபெண்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி எம் கனாடெ மற்றும் ரேவதி மொகித் அடங்கிய அமர்வு, ஹாஜி அலி தர்காவிற்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி அளித்தது, தடைவிதிப்பு ஒருவரது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று கூறியது.
ஹாஜி அலி தர்காவிற்குள் பெண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்படுவது இந்திய அரசியலமைப்பின் 14, 15, 19 மற்றும் 25 பிரிவுகளை மீறுவதாகும். ஆண்களை போன்று பெண்களையும் தர்காவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கவேண்டும்," என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இப்பிரிவுகளின் கீழ் சட்டத்தின் முன் ஒருமனிதனுக்கு சமஉரிமை உறுதிசெய்யப்படுகிறது, ஒருவர் தனக்கு பிடித்த மதத்தை பின்பற்றம் அடிப்படை உரிமை வழங்கப்படுகிறது. மதம், பாலினம் அடிப்படையிலான பாகுபாட்டிற்கு தடைவிதிக்கிறது மற்றும் உள்உணர்விற்கு சுதந்திரம் வழங்குகிறது, கோட்டுபாடுகளை தேர்வு செய்யவும், பின்பற்றவும், பிரசாரம் செய்யவும் சுதந்திரம் வழங்கப்படுகிறது.
தர்காவிற்கு செல்வதற்கு பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில அரசு செய்துக் கொடுக்கவேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். உயர்நீதிமன்றம் அனுமதி குறித்து மனுதாரர் ராஜூ மொரே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு தடை விதிப்பது என்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது. தர்கா டிரஸ்ட் உச்சநீதிமன்றத்தை நாடப்போவதாக கூறிஉள்ளது என்றார்.
மற்றொரு மனுதாரர் ஜாகியா சோமன் பேசுகையில், "மிகவும் மகிழ்ச்சி, இஸ்லாமிய பெண்களுக்கு நீதிக்கான ஒரு பெரிய படியாகும், என்று கூறினார்.
பெண்கள் ஆர்வலர் திருப்தி தேசாய் பேசுகையில், இது வரலாற்று சிறப்புவாய்ந்த முடிவு, உயர்நீதிமன்ற உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம். பெண்களுக்கு மிகப்பெரிய வெற்றி, என்று கூறினார்.
இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என ஷானி ஷிங்னாப்பூர் கோயிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி வேண்டி இதே போன்றதொரு போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற திருப்தி தேசாய் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஹாஜி அலி தர்கா டிரஸ்ட் இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய விரும்புவதாக கூறியது, இதனையடுத்து உத்தரவு ஆறுவார காலங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் ஹாஜி அலி தர்காவிற்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.