ஹஜ் கூட்டநெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியது: 32 பேர் மாயம்
டெல்லி: ஹஜ் கூட்டநெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 24ம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள மினா நகரில் ஹஜ் யாத்ரீகர்கள் சாத்தான் மீது கல்லெறியும் சடங்கில் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர், நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களில் ஈரானியர்கள் தான் அதிகம்(464) என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
Saudi authorities have identified more pilgrims who died in Haj stampede. The toll of Indian pilgrims is now 101. We have 32 missing.
— Sushma Swaraj (@SushmaSwaraj) October 9, 2015
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஹஜ் கூட்டநெரிசலில் பலியான மேலும் பல யாத்ரீகர்களின் உடல்களை சவுதி அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். பலியான இந்திய யாத்ரீகர்களின் எண்ணிக்கை தற்போது 101. மேலும் 32 பேரை காணவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஹஜ் கூட்டநெரிசல் விவகாரம் தொடர்பாக சவுதி அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்பட மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் சவுதி சென்றுள்ளார். இந்திய யாத்ரீகர்கள் அனைவரையும் அடையாளம் காண உதவுமாறு அவர் சவுதி அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.